Devotional song ‘Karuppan Enga Kulasamy’ Produced by AL Alagappan’s family deity, Tiruppattur Fort Karuppar temple
தயாரிப்பாளர் ஏ எல் அழகப்பனின் குலதெய்வமான திருப்பத்தூர் கோட்டை கருப்பர் திருக்கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நடிகர் உதயா தயாரிப்பில் ஶ்ரீகாந்த் தேவா இசையில் பக்திமயமான ‘கருப்பன் எங்க குலசாமி’ பாடல்
பாடலை வெளியிட்டு அமைச்சர் கே ஆர் பெரியகருப்பன் பாராட்டு, ஊர் மக்கள் பரவசம்
தயாரிப்பாளர் ஏ எல் அழகப்பனின் சொந்த ஊரான காரைக்குடி கல்லல் பாகனேரி அருகில் உள்ள சொக்கநாதபுரம் அருகே வீற்றிருக்கும் அவரது குலதெய்வமான அருள்மிகு திருப்பத்தூர் கோட்டை கருப்பர் திருக்கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நடிகர் ஏ எல் உதயா பாடல் ஒன்றை தயாரித்துள்ளார்.

சமீபத்தில் தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் உருவாகியுள்ள பக்திமயமான ‘கருப்பன் எங்க குலசாமி’ பாடலை தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு கே ஆர் பெரியகருப்பன் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 18) மாலை கோவில் வளாகத்தில் நடைபெற்ற விழாவில் வெளியிட்டார். காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஆர் ஆத்மநாதன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
பாடலை வெளியிட்டு பேசிய அமைச்சர், நடிகர் ஏ எல் உதயா, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா உள்ளிட்ட குழுவினரை மனமார பாராட்டியதோடு அவரது குலதெய்வ கோவிலுக்கும் இதே போன்றதொரு பாடலை இந்த குழுவினரே உருவாக்கி தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
வரும் பிப்ரவரி 21ம் தேதி திருப்பத்தூர் கோட்டை கருப்பர் திருக்கோவிலின் குடமுழுக்கு கோலாகலமாக நடைபெற உள்ள நிலையில், விழா குழுவினர் மற்றும் ஊர் மக்கள் இந்த பாடலுக்காக நடிகர் உதயா உள்ளிட்டவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டனர். பாடல் வெளியிடபப்பட்டது முதல் கோவிலில் தொடர்ந்து ஒலிபரப்பப்பட்டு வருகிறது.
வர்ஷேன்யம் ரெக்கார்ட்ஸ் யூடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள ‘கருப்பன் எங்க குலசாமி’ பாடலின் வரிகளை இயக்குநர் பவன் எழுதி அவரே இப்பாடலையும் இயக்கியுள்ளார். ஜேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சச்சின் சினிமாஸ் சார்பில் ஏ எல் உதயா தயாரித்துள்ள இப்பாடலை வி எம் மகாலிங்கம் பாட, எல் கே விஜய் ஒளிப்பதிவு செய்ய, சுராஜ் கவி படத்தொகுப்பை கையாண்டுள்ளார்.
பாடல் குறித்து பேசிய நடிகர் உதயா, “எங்கள் குலதெய்வமான கோட்டை கருப்பர் திருக்கோவிலுக்கு சமீபத்தில் நான் சென்றபோது கருப்பர் குறித்தும் கோவில் குறித்தும் பாடல் ஒன்றை உருவாக்கித் தர வேண்டும் என்று கோவில் நிர்வாகத்தினர் கேட்டுக் கொண்டனர். எங்கள் குடும்பத்தின் சார்பாக இந்த பாடலை தயாரித்துள்ளது குறித்து மிகவும் பெருமை அடைகிறேன். கோட்டை கருப்பரின் அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்,” என்று கூறினார்.
