A Sakunthala, also known as ‘CID Sakunthala’, passes away

121
18.09.2024
இரங்கல் செய்தி
சிஐடி சகுந்தலா என்று மிகப் பிரபலமாக அழைக்கப்படும் அருணாச்சலம் சகுந்தலா அவர்கள், 1960-ஆம் ஆண்டு முதல் திரைத்துறையில் கோலோச்சி, 600-க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட திரைப்படங்களில் கதாநாயகியாகவும், பல்வேறு முக்கிய கதாபாத்திரங்களிலும் திரையில் தனி முத்திரை பதித்தவர். திரையுலகில் நான்கு தலைமுறைகளைக் கடந்து பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துப் புகழ்பெற்றவர்.
மக்கள் திலகம் திரு எம் ஜி ஆர் அவர்கள், நடிகர் திலகம் திரு சிவாஜி கணேசன் அவர்கள், மக்கள் கலைஞர் திரு ஜெய்சங்கர் அவர்கள் உள்ளிட்ட பல முன்னணி கலைஞர்களோடு இன்றளவும் மனதில் நிற்கும் பல கதாபாத்திரங்களில் மிளிர்ந்து, தமிழ்த் திரையுலக வரலாற்றில் தன் சுவடுகளை பதித்தவர். காண்போரை கவர்ந்திழுக்கும் தனது நடனத் திறமையினாலும், நடிப்பு ஆற்றலாலும், ஆயிரக்கணக்கான ரசிகர்களை திரையரங்குகளுக்கு ஈர்த்த பெருமைக்கு உரியவர்.
கைதி கண்ணாயிரம், படிக்காத மேதை, ஒளி விளக்கு, சி ஐ டி சங்கர், வசந்த மாளிகை, தவப்புதல்வன், பொன்னூஞ்சல், அன்பைத் தேடி, ரோஜாவின் ராஜா, அதிர்ஷ்டக்காரன், இமயம், வண்டிச்சக்கரம், புதிய ராகம் உள்ளிட்ட பல வெற்றி திரைப்படங்களில் இவரது அற்புதமான நடிப்பின் மூலமாக ரசிகர்கள் நெஞ்சங்களில் நிரந்தரமாக குடி கொண்டவர். அன்பான இவரது அணுகுமுறையால் அடுத்த தலைமுறை நடிகர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்பவர்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மதிப்பிற்குரிய உறுப்பினராகவும், குறிப்பிடத்தகுந்த மூத்த திரைக்கலைஞர்களில் ஒருவராகவும் திகழ்ந்த சிஐடி சகுந்தலா அவர்கள்,17/09/2024 அன்று இயற்கை எய்தியது, தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கும், எங்கள் உறுப்பினர்களுக்கும் ஈடு செய்ய இயலாத ஒரு பேரிழப்பாகும். அவர்தம் நினைவும், புகழும் என்றென்றும்  திரையுலகத்தினர் மற்றும் ரசிகர்களின் நெஞ்சங்களில் நீடித்து நிலைத்திருக்கும்.
  அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தவருக்கு, தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக கனத்த இதயத்துடன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
வாழ்க அவரது புகழ்.
# தென்னிந்திய நடிகர் சங்கம்

Leave A Reply

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com