கொரனா ருத்திரதாண்டவம் இந்தியாவிலும் தனது கோர முகத்தை காட்டி வருகிறது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 500-ஐ தாண்டி விட்டது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.
நோய் தாக்கியவர்களுக்கு தனி வார்டுகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களுடன் தொடர்பு கொண்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, பொதுமக்கள் தேவையின்றி வெளியே நடமாட வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது. இதுதொடர்பாக கடந்த 19-ந்தேதி பிரதமர் மோடி தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக, நாடு முழுவதும் மக்கள் 22-ந்தேதி தாங்களாகவே ஊரடங்கை கடைப்பிடிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார். அதை ஏற்று, அன்றைய தினம் மக்கள் வீடுகளுக்குள் முடங்கினர். இந்தியாவே வெறிச்சோடியது.
இதைத்தொடர்ந்து, தமிழக அரசு, மாநிலம் முழுவதும் நேற்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவை அமல்படுத்தியது.
இந்நிலையில், பிரதமர் மோடி மீண்டும் நேற்று இரவு 8 மணிக்கு தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
அப்போது அவர் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவித்தார்.
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 19-ம் தேதி முதல் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் பெப்சியில் உறுப்பினர்களாக இருக்கும் பல ஆயிரம் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாகவும் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி கூறியிருந்தார். மேலும் திரைப்படத்துறையில் நல்ல நிலையில் இருக்கும் நடிகர், நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்களுக்கு வேண்டுகோள் ஒன்றையும் விடுத்தார்.
உங்களோடு பணிபுரிந்து உங்களோடு வாழ்ந்து வருகின்ற குடும்பங்களுக்கு உணவு அளிப்பீர். நிதி அளிப்பீர் என கேட்டுக் கொள்கிறோம் என்று கூறியிருந்தார்.
கொரோனாவால் வேலையிழந்த சினிமா தொழிலாளர்களுக்கு உதவும் விதமாக நடிகர் சிவகுமார் – சூர்யா – கார்த்தி குடும்பத்தினர் 10 லட்சம் ரூபாயும், ரஜினி 50 லட்சம் ரூபாயும், விஜய் சேதுபதி 10 லட்சம் ரூபாயும், சிவகார்த்திகேயன் 10 லட்சம் ரூபாயும் நிதியுதவி வழங்கியுள்ளனர். அது மட்டுமின்றி பிரகாஷ்ராஜ் மற்றும் தயாரிப்பாளர் தாணு ஆகியோர் அரிசி மூட்டைகளை அனுப்பியுள்ளனர்.
இந்நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கமும் உதவி கேட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தற்போது தனி அதிகாரி மூலம் செயல்பட்டு வரும் அந்த சங்கத்தின் முன்னாள் நிர்வாகிகள் அளித்த மனு அடிப்டையில், ஷூட்டிங் நடந்தால் மட்டும் கிடைக்கும் தின சம்பளத்தை மட்டும் நம்பி இருக்கும் 90 சதவீத நலிந்த நடிகர்களுக்கு உதவ முன்வரவேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையை பார்த்து ரூ.10 லட்சம் நிதியுதவியாக அளித்துள்ளார் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் என்பது குறிப்பிடத்தக்கது