

’இருமுடி கட்டு’ திரைப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு!
மாஸ் மகாராஜா ரவி தேஜா, இயக்குநர் சிவா நிர்வாணாவுடன் இணைந்து குடும்பம், நம்பிக்கை மற்றும் மனமாற்றத்தை மையமாகக் கொண்ட உணர்வுப்பூர்வமான கதையான ‘இருமுடி’ திரைப்படத்தில் நடித்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் தயாரிக்க, டி-சீரிஸ் பிலிம்ஸ் வழங்கும் ‘இருமுடி கட்டு’ திரைப்படம் உலகம் முழுவதும் ஆகஸ்ட் 21 அன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதன் பத்திரிகையாளர்கள் சந்திப்பு இன்று நடைபெற்றது.
தயாரிப்பாளர் ரவி சங்கர், “திரில்லர், குடும்ப கதை மற்றும் ஆன்மீகம் என மூன்று விதமான லேயர்களோடு இயக்குநர் சிவா இந்த கதையை எங்களிடம் சொன்னார். எப்படி இது சாத்தியமாகும் என்று எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆனால், அதை சிவா நேர்த்தியாக இந்த படத்தில் செய்து காட்டினார். மாஸ் மகாராஜா ரவி தேஜா, நடிகை பிரியா பவானி சங்கர் என நடிகர்களும், தொழில்நுட்ப குழுவினரும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். தென்னிந்திய ரசிகர்கள் அனைவரும் இந்த கல்ட் கிளாசிக் படத்தை திரையரங்குகளில் ரசிப்பார்கள். சிவா நிர்வாணாவின் இந்த படத்தை அந்த கடவுள் ஐயப்பாவே தேர்வு செய்து உள்ளார். படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்”.
வசனகர்த்தா விஜய் பாலாஜி, “மைத்ரி மூவி மேக்கர்ஸூடன் ஏற்கனவே இரண்டு படங்கள் பணிபுரிந்திருக்கிறேன். மூன்று தந்தைகளுக்கும் இடையே நடைபெறும் கதை இது. இந்தப் படத்திற்கு பெரும் பலம் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்தான். மெட்ராஸ் தினத்தில் சென்னை வந்திருக்கிறார் மாஸ் மகாராஜா. படம் நிச்சயம் அனைவருக்கும் பிடிக்கும்”.
பாடலாசிரியர் பாலாஜி வேணுகோபால், ” ரவி தேஜா சாரின் படத்திற்கு பாடல் எழுதியிருப்பது நான் கனவிலும் நினைக்காத ஒன்று. தமிழ் படத்தை விட இந்தப் படத்தை நிச்சயம் ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்று நம்பிக்கை உள்ளது. பிரியா பவானி சங்கரின் வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறது. படத்தின் கிளைமாக்ஸில் நெகிழ்ந்து விட்டேன். இந்தப் படத்தில் நான் எழுதிய மூன்று பாடல்களுமே கதையோடு ஒன்றிய முக்கியமான பாடல்கள். நிச்சயம் படம் அனைவருக்கும் பிடிக்கும்”.
ஒளிப்பதிவாளர் விஷ்ணு ஷர்மா, ” ரவி தேஜா சாரின் படத்தில் பணிபுரிந்திருப்பது பெருமையான விஷயம். சிவா சார் கதையை சிறப்பாக எடுத்துள்ளார். நிச்சயம் தமிழ் ரசிகர்களுக்கும் இது புதுவிதமான கதையாக இருக்கும்”.
குழந்தை நட்சத்திரம் நட்சத்திரா, “இந்த படம் எனக்கு ரொமவே ஸ்பெஷல். என்னை தேர்ந்தெடுத்த இயக்குநர் சிவா சார், மாஸ் மகாராஜா ரவி தேஜா சார், பிரியா பவானி மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி”.
நடிகை பிரியா பவானி சங்கர், ” படத்தின் கதை கேட்ட போது அதில் மிகப்பெரிய நம்பிக்கை வந்தது. இசையமைப்பாளராக ஜிவி பிரகாஷ் உள்ளே வந்த போது படத்தின் பாடல்கள் மிகப்பெரிய ஹிட் என்பது உறுதியானது. மிகப்பெரிய கதாநாயகனின் படம் என்ற போதிலும் படப்பிடிப்பின் போது எந்த விதமான மாற்றமும் செய்யாமல் சொன்ன கதையை அப்படியே இயக்குநர் சிவா எடுத்துள்ளார். இந்தப் படத்தில் நானும் ஒரு அங்கம் என்பது பெருமையாக உள்ளது. ரவி தேஜா சாருடன் பணிபுரிந்தது மறக்க முடியாத அனுபவம். வேறு மொழியில் இருந்து வந்த படம் என்று தமிழ் ரசிகர்கள் நிச்சயம் இதை நினைக்க மாட்டார்கள். மொழி என்பது தடையல்ல! அப்பா- மகள் இருக்கும் அனைத்து இடங்களிலும் இந்த படம் வெற்றி பெறும்”.
இயக்குநர் சிவா நிர்வாணா, “தமிழ் சினிமாவோடு எப்போதும் எனக்கு எமோஷனல் கனெக்ட் உண்டு. குறிப்பாக பாரதிராஜா சார், பாக்யராஜ் சார் படங்கள் மிகவும் பிடிக்கும். திரையரங்குகளை விட்டு ரசிகர்கள் வெளியேறும் பொழுது அவர்களுக்கு அந்த படத்தில் இருந்து எடுத்துக் கொள்ள நிச்சயம் ஏதாவது ஒரு விஷயம் இருக்க வேண்டும். அந்த மாதிரி படங்களை இயக்க வேண்டும் என்பதே என்னுடைய எண்ணம். அந்த வகையில் தமிழ் சினிமா எனக்கு நிறைய கொடுத்துள்ளது. குடும்பத்துடன் பார்த்து மகிழும் திரைப்படம் ஆக ‘இருமுடி கட்டு’ இருக்கும். இந்த படம் பார்த்து முடித்ததும் அதன் தாக்கத்தால் நிச்சயம் உங்கள் மகள், மனைவியை பற்றி யோசிப்பீர்கள். தெலுங்கில் படம் சூப்பர் ஹிட். குடும்பம் குடும்பமாக வந்து பார்க்கிறார்கள். அதை போலவே தமிழிலும் ரசிகர்கள் குடும்பத்துடன் வந்து பார்க்க வேண்டும் என விரும்புகிறேன். படத்திற்கு ஆதரவு கொடுத்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி. படத்தில் பிரியாவின் கதாபாத்திரம் நிச்சயம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். ரவி தேஜா சாரை இந்த படத்தில் வேறொரு கோணத்தில் பார்க்கலாம். நிச்சயம் தமிழ் ரசிகர்களுக்கு இந்த படம் பிடிக்கும்”.
இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், “ஒரு படத்திற்கு இசையமைக்க அதன் கதை மிகவும் முக்கியம். ‘பொல்லாதவன்’, ‘ராஜா ராணி’ படங்களின் கதை கேட்டபொழுது இது நிச்சயம் பிளாக்பஸ்டர் என தோன்றியது. அதுபோலவே ‘இருமுடி கட்டு’ படத்தின் கதை கேட்டபோதும் நிச்சயம் இது வெற்றி பெறும் என தோன்றியது. இங்கே நிறைய ஹீரோக்கள் ரவி தேஜா சாருக்கு ரசிகர்கள். ‘பாட்ஷா’ படத்தில் ரஜினிக்கு எப்படி தனித்துவம் இருந்ததோ அது போலவே கமர்சியல் படங்களில் ரவி தேஜா சருக்கும் தனித்துவம் இருக்கிறது. நிறைய இயக்குநர்களும் அவருக்கு ரசிகர்கள். இனி சிவா படங்களுக்கு என்று தனி ரசிகர்கள் உருவாகி விடுவார்கள். தெலுங்கில் இந்த படம் மிகப்பெரிய ஹிட். குழந்தை நட்சத்திரம் நட்சத்திரா இந்த படத்திற்காக பல விருதுகளை பெறுவார் என்று எதிர்பார்க்கிறேன். குடும்பத்தோடு நிச்சயம் நீங்கள் திரையரங்குகளில் சென்று பார்க்கலாம். தொழில்நுட்ப குழுவினரும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். நன்றி”.
நடிகர் ரவி தேஜா, “இந்தப் படத்தின் தொழில்நுட்பக் குழுவினர் அனைவருக்கும் நன்றி. ஜிவி பிரகாஷ்குமாரின் இசைதான் இந்தப் படத்தின் ஆன்மா. தெலுங்கில் இந்தப் படம் மிகப்பெரிய ஹிட். நட்சத்திராவுக்கு நல்ல எதிர்காலம் உண்டு. பிரியாவும் சிறப்பாக நடித்துள்ளார். தயாரிப்பாளர்களின் ஆதரவுக்கு நன்றி. இயக்குநர் சிவாவை எனக்கு பிடிக்கும். அது ஏன் என்பதை படத்தின் வெற்றி விழாவில் சொல்கிறேன். படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்”.
