Audio and Trailer Lauch of “Arjunan Per Patthu” movie event stills & News

59

 

கதாநாயகி பற்றிக் கவலை இல்லை கதை தான் முக்கியம் : நடிகர் யோகி பாபு பேச்சு!

கமல் சாருடன் நடிக்க வேண்டும் :யோகி பாபு ஆசை!

சென்னைக்காரர்களுக்கும் சினிமா என்பது சிரமமானது தான் : யோகி பாபு பேச்சு!

நல்ல கதையுடன் வரும் புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பேன் :யோகி பாபு உறுதி!

நடிகர் யோகி பாபு நடித்து 300 ஆவது திரைப்படமாக வருகிற ஜூலை 17-ஆம் தேதி வெளி வர இருக்கும் திரைப்படைப்பு ‘அர்ஜுனன் பேர் பத்து’.

இப்படத்தை ரா. ராஜ்மோகன் எழுதி இயக்கியுள்ளார்.

இப்படத்தில் யோகி பாபுவுடன் ,அனாமிகா மஹி,காளி வெங்கட், அருள் தாஸ், லெனின் பாரதி, சுப்பிரமணியம் சிவா, மைனா நந்தினி, மதன் தட்சிணாமூர்த்தி, சென்ட்ராயன், ஹலோ கந்தசாமி ,எம் சௌந்தர்யா சரவணன் ,ரஞ்சன் குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப்படத்துக்கு டி .இமான் இசையமைத்துள்ளார் .பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார்.மு. காசி விஸ்வநாதன் படத்தொகுப்பு செய்துள்ளார்.பாடல்களை கார்த்திக் நேத்தாவும் வசனத்தை எம் .ஆர் .அருண் சந்தரும் எழுதியுள்ளனர்.கலை இயக்கத்தை B. சேகரும் சண்டைக் காட்சிகளை ஓம் பிரகாஷும் கவனித்துள்ளனர். ஆடியோ லஹரி மியூசிக்.

தேவ் சினிமாஸ் சார்பில் கிருத்திகா தங்கப் பாண்டி எஸ் மற்றும் தங்கப்பாண்டி. D தயாரித்துள்ளனர்.

இணைத் தயாரிப்பு: எல் .சுந்தரபாண்டி

இப்படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழாவிழா பிரசாத் லேப் திரையரங்கில் சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவில் படக் குழுவினருடன் ஏராளமான சிறப்பு விருந்தினர்களும் கலந்து கொண்டனர்.

விழாவில் கதை நாயகன் யோகி பாபு பேசும் போது,

” எல்லாருக்கும் வணக்கம். இந்த படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர் தங்கபாண்டி சார், கீர்த்திகா மேடம்,இயக்குநர் ராஜ்மோகன் உங்களுக்கு எல்லாம் ரொம்ப நன்றி.
இது எனது 300 ஆவது படம் என்று எப்படிக் கண்டுபிடித்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால் இந்த நம்பருடன் நாமே ஒரு வரையறை வைத்துக் கொள்ளக் கூடாது.
எனவே 300 என்ற எண் எனக்குப் போதாது.ஒரு நடிகராக இருந்து கொண்டு நாமே ஒரு எண்ணிக்கை போட்டுப் பெருமைப்படுத்திக் கொள்ளக் கூடாது. அந்த எண்ணிக்கையைக் கடைசி காலத்தில் தான் சொல்ல வேண்டும்.
நாகேஷ் சார், மனோரமா அம்மா போன்ற ஜாம்பவான்கள் நடித்த எண்ணிக்கையைப் போல் நானும் நிறைய படங்கள் நடித்துப் பெரிதாக வளர வேண்டும். அந்த அளவிற்குச் செல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.இந்தப் படத்தில் நடித்த சென்ட்ராயனுக்கு நன்றி.இந்தப் படத்தில் நான் அழுவது போல் பெரிதாக ஒன்றும் செய்யவில்லை என்று நினைக்கிறேன்.
அடுத்து மைனா உங்களுக்கு ரொம்ப நன்றி. கதாநாயகி அனாமிகாவுக்கு நன்றி.

நான் 2016 லேயே நயன்தாரா கூட நடித்து விட்டேன். இனி யாருடன் நடிக்க வேண்டும் என்கிற கவலை இல்லை.எந்தக் கதாநாயகியுடனும் நடிக்க வேண்டும் என்ற கவலை இல்லை.நமக்குக் கதை தான் முக்கியம் ,கதாநாயகி அல்ல.

இமான் சார் எனக்குப் பிடித்த இசையமைப்பாளர். அவர் என்னைப் பாராட்டிப் பேசினார். ஆனால் நானும் அவரை எப்போதும் பாராட்டிக் கொண்டிருக்கிறேன் .நானும் பிரபு சாலமன் சாரும் ‘மேம்போ’ படத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது எப்போதும் அவரைப் பற்றித் தான் பேசுவோம். அவரும் பெருமையாகச் சொல்வார்.
நான் முன்னணிப் பாத்திரத்தில் நடிக்கும் படங்களின் இசையை அவரிடம் தர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.கண்டிப்பாக நீங்கள் செய்து தர வேண்டும்.இந்தப் படத்துக்காக அவரிடம் ஒரு வேண்டுகோள் வைத்தேன், அதைச் செய்து கொடுத்து உதவினார்.ரொம்ப நன்றி சார்.காளி வெங்கட் என் நல்ல நண்பர்.நான் அழைத்ததும் உடனே வந்து விட்டார்.அவர் நாயகனாக நடிக்கும் படங்களில் இரண்டு காட்சிகளுக்குக் கூப்பிட்டால் கூட போய் நடித்துக் கொடுப்பேன். நித்திலன் இங்கே வந்ததற்கு ரொம்ப நன்றி.பாடல் எழுதியிருக்கும் கார்த்திக் நேத்தா சாருக்கும் நன்றி.
மேலும் இங்கே வந்துள்ள
மதன் சார், ரமேஷ் சார், சௌந்தர்யா எல்லாருக்கும் ரொம்ப நன்றி. கேமராமேன் பிரதீப்,உதவி இயக்குநர்கள் எல்லாருக்கும் ரொம்ப நன்றி.

இந்தப் படத்தின் இயக்குநர் ராஜ்மோகன் எனக்கு நீண்ட காலமாக நல்ல பழக்கம்.

ஆற்காடு பக்கத்தில் ஒரு கிராமம் தான் எங்கள் தாத்தாவோட பூர்வீகம். நாங்கள் பிறந்ததெல்லாம் எல்லாமே சென்னைதான்.வெளியூரிலிருந்து வந்தவர்களுக்குத் தான் சினிமா கஷ்டம் என்று கிடையாது .சென்னையில் பிறந்தவர்களுக்கும் சினிமா கஷ்டம் தான்.
சென்னை வாசிதான் நாங்க எல்லாமே. நான் அதை இந்த 24 வருஷம் அனுபவப்பட்டுத் தெரிந்திருக்கிறேன்.

2009 வந்து யோகிதான் உங்களுக்குத் தெரியும். அதுக்கு முன்னாடி நான் லொள்ளுசபா போல எல்லா சேனலிலும் நிகழ்ச்சிகளில் பணியாற்றி இருக்கிறேன்.எல்லார் கூடவும் பணியாற்றி இருக்கிறேன் ஆர்ட் டைரக்டர் இடம் உதவியாளராக வேலை பார்த்துள்ளேன் .இப்படி நிறைய வேலை பார்த்திருக்கிறேன். நாம் வளர வேண்டும் என்றால் அதெல்லாம் செய்துதான் ஆக வேண்டும்.அவை யாவும் என்னுடைய வளர்ச்சிக்கு நான் செய்தவை தான்.

இந்த ராஜ்மோகன் பற்றி இங்கே சொல்ல வேண்டும்.
ஒரு நாள் ராஜ்மோகன் என்னிடம் வந்து ஒரு மாதிரி கதை சொன்னான்.அதன் பிறகு ஆளே காணோம். கொஞ்ச நாள் காணாமல் போய்விட்டான்.மூன்றாண்டுகளுக்கு முன்பு ஒரு நாள் என் அலுவலகத்தில் இருக்கும்போது ராஜ்மோகன் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறான் என்று நினைவுவந்தது. உடனே அவனுக்குப் போன் செய்தேன்.என்ன செய்கிறாய் என்று கேட்டேன்.இது மாதிரி ஒன்று செய்து கொண்டிருக்கிறேன் என்றான் உடனே வா படம் பண்ணலாம் என்று அழைத்தேன்.அதற்குப் பிறகுதான் சந்தித்தோம்.அப்படித்தான் இந்த படம் ஆரம்பித்தோம்.இது மாதிரி நிறைய உதவி இயக்குநர்களுக்கு நான் உதவி செய்யத் தயாராக இருக்கிறேன் நல்ல கதையோடு வாருங்கள்.சரியாகச் செய்யுங்கள்.மீண்டும் எனக்கு வாய்ப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி”. என்றார்.

பேசி முடித்ததும் அவருடன் செய்தியாளர்கள் கலந்துரையாடிய போது அவரிடம் யாருடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது என்று கேட்ட போது, “கமல் சாருடன் மட்டும் தான் இன்னும் நடிக்கவில்லை. விரைவில் நடிப்பேன் என்று நம்புகிறேன் “என்றார். மேலும் யோகி பாபு பகிர்ந்து கொண்டவை:

“300 படங்கள் வரை வந்துள்ளதற்குத் தெய்வ பக்தி காரணம்.நான் வழங்கும் முருகன்தான் அதற்குக் காரணம். எனக்கு முருகன் மேல் பெரிய நம்பிக்கை உள்ளது.

நான் எந்த பிரேமில் தலை காட்டினாலும் என்னை ஒரு நகைச்சுவை நடிகராகத்தான் பார்க்கிறார்கள்.நகைச்சுவை வேடங்கள் தான் எனக்குச் சோறு போடுகிறது. அதை முதலில் நான் திருப்தி செய்ய வேண்டும்.அதனால் அதை நிறுத்த மாட்டேன்.சில படங்களில் லீடு என்று முன்னணிப் பாத்திரங்களில் என்னைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் அவ்வளவுதான்.மற்றபடி நான் ஒரு நகைச்சுவை நடிகராகத் தான் என் காலத்தை ஓட்டுகிறேன்.என்னை ஆதரித்து வரும் ரசிகர்களுக்கு நன்றி. அவர்களுக்கு நான் இன்னும் படங்களின் மூலம் கொடுக்க வேண்டும், நிச்சயம் செய்வேன்” இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் முன்னதாக தயாரிப்பாளர் தங்கப்பாண்டி அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

மேலும் விழாவில்சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் சுசீந்திரன், நித்திலன், ஷான் ,படத்தின் இயக்குநர் ரா.ராஜ்மோகன், இசையமைப்பாளர் இமான்,ஒளிப்பதிவாளர் பிரதீப் காளி ராஜா, கதாநாயகி அனாமிகா,மைனா நந்தினி, அருள்தாஸ், காளி வெங்கட், லெனின் பாரதி,சுப்பிரமணியம் சிவா, சென்ட்ராயன் மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினர்.

விழாவின் நிறைவில் ட்ரெய்லர் பாடல்கள் வெளியிடப்பட்டன.
300 ஆவது படத்தை முன்னிட்டு நாயகன் யோகிபாபுவுக்குத் தயாரிப்பாளர் ஆளுயர மாலை அணிவித்தார். அத்துடன் விழாவில் கேக் வெட்டி மகிழ்ச்சியைக் கொண்டாடினார்கள்.

யோகி பாபுவின் 300 வது படமான ‘அர்ஜுனன் பேர் பத்து’ வருகிற ஜூலை 17-ஆம் தேதி வெளிவர இருக்கிறது.

Leave A Reply

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com