ஆய்வுக்குப் பின் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் தகவல்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் இன்று (09.05.2023) சென்னை, மயிலாப்பூர், அருள்மிகு திருவள்ளுவர் திருக்கோயிலில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள திருப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.
பின்னர், மாண்புமிகு அமைச்சர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, 2023 – 2024 ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற மானியக் கோரிக்கை அறிவிப்பின் போது “சென்னை, மயிலாப்பூர், அருள்மிகு முண்டகக் கண்ணியம்மன் திருக்கோயிலுடன் இணைந்த அருள்மிகு திருவள்ளுவர் திருக்கோயிலுக்கு ரூ.15 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்” என அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில் திருப்பணிகள் தொடர்பாக தயாரிக்கப்பட்டுள்ள மாதிரி வரைபடத்தினை முழுமையாக பார்த்து திருக்கோயிலையும் ஆய்வு செய்தோம்.
அந்த வகையில், திருக்கோயிலின் நுழைவு வாயிலை புதுப்பித்தல், பொற்றாமரை குளம் போன்ற வடிவமைப்பை உருவாக்குதல், அறம், பொருள், இன்பத்திற்குண்டான விளக்கமுறையாக பதாகைகளை உருவாக்குதல், ஏற்கனவே இத்திருக்கோயிலில் அமைந்திருக்கின்ற திருவள்ளுவர் மற்றும் வாசுகி சன்னதிகளை புதுப்பித்தல், திருவள்ளுவரின் பெற்றோர்கள் வடிவமைக்கப்பட்டுள்ள சன்னதியை புதுப்பித்தல், கருமாரியம்மன், சிவன், காமாட்சியம்மன் சன்னதிகளை புதுப்பித்தல், கூடுதலாக இத்திருக்கோயிலின் நூலகத்தினை புதுப்பொலிவுடன் மேம்படுத்துதல், மடப்பள்ளியை புதுப்பித்தல், திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு வாகன நிறுத்துமிடம் ஏற்படுத்தி தருதல், அர்ச்சகர்கள் குடியிருப்பை புதுப்பித்தல் என ஒட்டுமொத்தமாக திருக்கோயிலை மேம்படுத்திடும் வகையில் ஆய்வினை மேற்கொண்டு இருக்கின்றோம்.
வாழ்ந்து மறைந்தாலும், நம்முடைய மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் திருவள்ளுவருக்கு ஒரு கோட்டத்தை கண்டார். கன்னியாகுமரியில் வான் உயர வள்ளுவருக்கு சிலையை அமைத்தார். திருக்குறளுக்கு உரை எழுதினார். அந்த வகையில் சுமார் 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருவள்ளுவர் கற்சிலை அமைந்திருக்கும் 500 ஆண்டுகளுக்கு மேலான இத்திருக்கோயிலுக்கு பக்தர்கள் விரும்பி வருகின்ற வகையிலும், சுற்றுலாத்தலமாகவும் மேம்படுத்தித்திடும் வகையிலும் உருவாக்கிட வேண்டும் என்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுடைய வழித்தோன்றல் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்கள் ரூ.15 கோடியில் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டிருக்கின்றார். அந்த வகையில் வான்புகழ் திருவள்ளுவரின் நினைவினை போற்றுகின்ற வகையில் இத்திருக்கோயில் வடிவமைக்கப்படும்.
இத்திருக்கோயிலின் திருப்பணிகளை மேற்பார்வையிடவும், துரிதப்படுத்தவும் இந்து சமய அறநிலையத்துறையின் உயர்மட்டக் ஆலோசனைக்குழு உறுப்பினர் திருமதி தேச மங்கையர்கரசி அவர்களை பணித்திருக்கின்றோம். அவரும் இதில் அதிக அக்கறை எடுத்து விரைவுப்படுத்துகின்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றார் என்று தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் திருமதி பிரியா ராஜன், மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.த.வேலு, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் திரு.க.வீ.முரளீதரன், இ.ஆ.ப., உயர்மட்ட ஆலோசனைக் குழு உறுப்பினர் திருமதி தேச மங்கையர்க்கரசி, சென்னை மண்டல இணை ஆணையர் திருமதி கி.ரேணுகாதேவி, செயற்பொறியாளர் திரு.பெ.கோவிந்தராஜீலு, திருக்கோயில் செயல் அலுவலர் திரு. கொளஞ்சி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
