உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகும் ‘வா பகண்டையா’! – காதலோடு அரசியல் பேசும் சமூகத்திற்கான கமர்ஷியல் படம்

586

 

தமிழ் சினிமாவில் உண்மை சம்பவங்களை மையமாக வைத்து உருவாகும் பல படங்கள் வெற்றி பெற்றுள்ளது. அந்த வகையில், உண்மை சம்பவம் ஒன்றை மையமாக வைத்து உருவாகும் படம் ‘வா பகண்டையா’. படத்தின் தலைப்பே சற்று யோசிக்க வைக்கும் விதத்தில் இருப்பது போல, படத்தின் கதையும், படம் பார்ப்பவர்களை யோசிக்க வைக்கும் விதத்தில் உருவாகியுள்ளது.

‘வா பகண்டையா’ என்பது கிராமத்தின் பெயர். விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் ‘வா பகண்டையா’ என்ற கிராமம் தான் கதைக்களம் என்பதால், படத்திற்கு அதையே தலைப்பாக வைத்திருக்கிறார்கள்.

ஹீரோவாக அறிமுக நடிகர் விஜய தினேஷ் நடிக்க, அறிமுக நடிகை ஆர்த்திகா ஹீரோயினாக நடிக்கிறார். வில்லனாக அறிமுக நடிகர் நிழன் நடிக்க, மற்றொரு வில்லனாக மும்பை நடிகர் யோகி ராம் நடிக்கிறார். இவர்களுடன் ஆர்.சுந்தர்ராஜன், நிழல்கள் ரவி, மீரா கிருஷ்ணன், ‘வெண்ணிலா கபடி குழு’ புகழ் நித்திஷ் வீரா, பவர் ஸ்டார் சீனிவாசன், மனோபாலா, காதல் சுகுமார், பிளாக் பாண்டி,
போண்டா மணி ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளி ரெவல்யூசன் சார்பில் ப.ஜெயகுமார் இப்படத்தை தயாரிப்பதோடு, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். எஸ்.ஏ.ராஜ்குமார் இசையமைத்து பாடல்கள் எழுதுகிறார். ஆரி ஆர்.ஜே.ராஜன் ஒளிப்பதிவு செய்ய, சுரேஷ் அர்ஸ் படத்தொகுப்பு செய்கிறார். சிவசங்கர், அக்‌ஷை ஆனந்த், விஜி ஆகியோர் நடனம் அமைக்க, இடி மின்னல் இளங்கோ சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார். மக்கள் தொடர்பாளராக கோவிந்தராஜ் பணியாற்றுகிறார்.

படம் குறித்து இயக்குநரும் தயாரிப்பாளருமான ப.ஜெயகுமாரிடம் கேட்ட போது, ”வா பகண்டையா கிராமத்தை சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவனும், தடகள வீரனுமான ஹீரோவும், அதே கிராமத்தை சேர்ந்த மிராசுதாரரின் மகளான ஹீரோயினும் சிறு வயது முதலே நட்பாக பழகுகிறார்கள். பிறகு அதுவே காதலாக மலர, இருவரும் உயிருக்கு உயிராக காதலிக்கிறார்கள். ஹீரோவை
இந்தியாவின் சிறந்த தடகள வீரனாக்குவதற்காக ஹீரோயின் போராடி வருகிறார்.

அதே சமயம், வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த அவர்களின் காதலுக்கு அவர்களது சமூகம் எதிர்ப்பு தெரிவிக்க, வீட்டை விட்டு வெளியேறும் காதல் ஜோடி, தங்களது காதலை எதிர்ப்பவர்களை எதிர்த்து போராடி வென்றார்களா, ஹீரோவின் லட்சியத்தை ஹீரோயின் நிறைவேற்றினாரா, என்பதே படத்தின் கதை.

காதல், காமெடி, ஆக்‌ஷன், அம்மா செண்டிமெண்ட் என அனைத்து அம்சங்களும் நிறைந்த முழுமையான கமர்ஷியல் படமாக இப்படத்தை இயக்கியிருந்தாலும் சமூகத்திற்கு தேவையான மெசஜ் ஒன்றை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறேன். தற்போதைய அரசியல் மற்றும்
சமூகத்தில் நடக்கும் குற்றங்கள் மற்றும் மக்களுக்கும் சமூகத்திற்கும் தேவையானதை படம் முழுவதும் பேசியிருந்தாலும், பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் பற்றி விரிவாக பேசியிருக்கிறோம்.

மொத்தத்தில், ‘வா பகண்டையா’ பொழுதுபோக்கிற்கான ஒரு படமாக மட்டும் இன்றி, மக்களுக்கான படமாகவும், தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்க்கும் படமாகவும் இருக்கும்.

தமிழகம் முழுவதும் படப்பிடிப்பு நடத்தியுள்ளோம். தற்போது முழு படத்தையும் முடித்து பின்னணி வேலைகளையும் முடித்துவிட்டோம். ஜனவரி மாதம் பாடல்கள் வெளியீட்டு நிகழ்ச்சி நடத்த இருக்கிறோம். அதை தொடர்ந்து படத்தின் வெளியீட்டு தேதியும் அறிவிப்போம்.
படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் பாடல்களாக வந்துள்ளது.

குறிப்பாக எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் பாடிய “வெங்காட்டு சந்தையிலே விலை போகா வெள்ளரிக்கா…” மற்றும் “தாயவள் தந்த அன்பினை போல தேடிய செல்வம் தருமா…” என்று தொடங்கும் இந்த இரண்டு பாடல்கள் ரொம்பவே ஸ்பெஷல். காரணம், எஸ்.பி.பி
அவர்கள் பாடிய கடைசி பாடல்கள் இவை. தற்போது வரை எங்களுக்கு மட்டும் ஸ்பெஷலாக இருக்கும் இந்த பாடல்கள் வெளியான பிறகு ஒட்டு மொத்த தமிழ் ரசிகர்களுக்கும் ஸ்பெஷல் பாடலாக இருக்கும். இந்த பாடல்களுடன் மேலும் நான்கு பாடல்கள் படத்தில் உள்ளது. நான்கும் வெவ்வேறு வகையில் ஹிட் பாடல்களாக வந்துள்ளது. எஸ்.ஏ.ராஜ்குமார், சுவேதா மோகன், ரீட்டா, யாசீன் நிஸார், தீபக் ஆகியோர் பாடல்களை பாடியுள்ளனர்.” என்றார்.

Leave A Reply

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com