
நடிகர் ரோபோ சங்கர் தமிழ் சினிமாவின் முன்னனி காமெடி நடிகர். காமெடி மட்டுமில்லாமல் சமூக சேவையில் தன்னை முன்னிறுத்தி முதல் ஆளாக களமிறங்குபவர். வறுமையில் வாடும் கலைஞர்களுக்கு உதவுவதாக இருக்கட்டும் , வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு தேடிச்சென்று உதவுவது என ரோபோ சங்கரின் வழி எப்போதும் தனி வழி தான். கரோனா சூழலால் உலகமே மன உளைச்சலுக்குள் சுழன்று கொண்டிருக்கும் நிலையில் சிறைக்கைதிகளாக இருக்கும் மனிதர்களுக்காகவும் , சீர்திருத்தப்பள்ளி மாணவர்களுக்காகவும் முதல் ஆளாக களத்தில் இறங்கியுள்ளார். 75 வது ஆண்டு சுதந்திர தினத்தன்று இந்தப்பணியைத் தொடங்கியுள்ளார். முதற்கட்டமாக தஞ்சாவூரில் உள்ள சீர்திருத்தப்பள்ளிக்குச் சென்று அங்கு இருந்த மாணவர்களை தன் நகைச்சுவை அனுபவங்கள் மூலம் வயிறு குலுங்கச் சிரிக்க வைத்துள்ளார். தன் கவலைகளை மறந்து அத்தனை பேரும் சிரிப்பில் மூழ்கியுள்ளனர். முதற்கட்ட முயற்சிக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இனி தொடர்ச்சியாக சிறப்பு நாட்களில் சிறைச்சாலைகளுக்குச் சென்று கைதிகளை மகிழ்விக்கும் முடிவில் இருக்கிறார். திரையில் வந்தோமா கல்லாவை நிரப்பினோமா என்று செல்லாமல் மன உளைச்சலில் இருக்கும் மக்களுக்கு குறிப்பாக சிறைச்சாலை கைதிகளுக்காக களத்தில் இறங்கிய ரோபோ சங்கரை சக நடிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
