“வண்ணத்தமிழ் வாழும்”

648

 

 

அன்னைத் தமிழை, அனைவரும் விரும்பும் அழகு தமிழை, வண்ணத் தமிழை, வாழ்வாங்கு வாழ்ந்து வரும் நம் தமிழ் மொழியை காலத்துக்கு ஏற்ப கணிணியில் ஏற்றி நம் இன்றைய இளைய தலைமுறை அடுத்தடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் என்னும் அசைக்க முடியாத நம்பிக்கையினை தமிழகம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நடைபெற்ற பரிசளிப்பு விழா ஏற்படுத்திச் சென்றது. மார்ச் மாதம் 27ம் தேதி ஓசூர் இராயல சீமா ஓட்டலில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி பல தலைப்புகளில் நடைபெற்றது.

காலை தொடங்கி மாலை வரை மதிய உணவு நேரம் கடந்தும் சிறிதும் சோர்வு இன்றி தொய்வு இன்றி விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முகநூலில் மூழ்கிக் கிடக்கும் இந்த இயந்திர உலகில் மாணவச் செல்வங்கள் மேடையில் கம்பீரமாய் நின்று பார்வையாளர்கள் முகம் பார்த்து தமிழை அருவியாய் கொட்டினர். அவர்களுடைய பேச்சில் எதுகையும் மோனையும் சர்வசாதாரணமாய் வந்து பேச்சை அழகுபடுத்தின.

தலைப்பை ஒட்டிய தேடல் உழைப்பு மாணவர்களின் பேச்சில் தென்பட்டது. தெளிவான பேச்சும் அழுத்தமான அழகான உச்சரிப்பும் சாப்பாட்டு நேர பசியையும் மறக்கச் செய்தது. நடுவர்கள் திக்குமுக்காடிப் போயினர்.

தமிழ் உணர்வாளர் புலவர் பாண்டியனார் நினைவாக அவரது பிறந்த நாளை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியினை ஓசூர் ஜேஸிஐ அழகாக நடத்திக் காட்டியது. விழாவுக்கு சிறப்பு விருந்தினர்களாக உரத்த சிந்தனை உதயம் ராம், திரைப்பட இயக்குநர் இராசி அழகப்பன் தொழில் முனைவர் ஜேஸி பா.மேகநாதன் ஆகியோர் வந்திருந்தனர்.

வித்தியாசமான தலைப்புகளில் பேசி அசத்திய மாணவர்களைப் பாராட்டி பரிசளித்து மகிழ்ந்தனர். நண்பர்களைக் காண ஒரு பார்வையாளராய் வந்த சிவாஜி ரசிகன் தகடூர் வெங்கட்டும் விழாவில் பங்கு கொண்டு திருமூலர் பாடல் மூலம் ஆரோக்கியத்தின் அவசியத்தை எடுத்துரைத்தார். இந்தியாவில் கொரோனா பயம் நீங்கி இயல்பு வாழ்க்கையில் மக்கள் இருப்பதை பார்க்க முடிந்தது. சத்து நிறைந்த பாரம்பரிய உணவு பற்றிய விழிப்புணர்வு. மக்களிடம் இருப்பதையும் உணர முடிந்தது.

Leave A Reply

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com