ஜி. எஸ். ஆர்ட்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி. அருள்குமார் தயாரிப்பில், ‘ஆக்சன் கிங்’ அர்ஜுன்- ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில், அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அதிரடி ஆக்சன் திரில்லராக உருவாகியிருக்கும் திரைப்படம் ‘தீயவர் குலை நடுங்க’.
இப்படம் வரும் நவம்பர் 21 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படக்குழு பத்திரிக்கை, ஊடக மற்றும் பண்பலை நண்பர்களை சந்தித்து, படம் குறித்தான தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர்.
இந்நிகழ்வினில்
தயாரிப்பாளர் ஜி அருள்குமார் பேசியதாவது..,
மிக மகிழ்ச்சியாக இருக்கிறது இறைவனை வேண்டிக்கொண்டிருந்தேன், இந்த விழா எப்படி நடக்கும் என நினைத்தேன், எல்லாம் ஒன்றாக இணைந்து இன்று விழா நடப்பது மகிழ்ச்சி. இப்படத்தில் எனக்கு ஒப்புதல் தந்து உழைத்த அனைவருக்கும் நன்றி. நான் பூ வித்து வளர்ந்தவன், நான் அர்ஜுன் சாரின் ஜெண்டில்மேன் படம் பார்த்துள்ளேன். அவரின் ரசிகன் இன்று அவரை வைத்துப் படமெடுத்துள்ளேன் என்பது மிகப்பெரிய மகிழ்ச்சி. எனக்குத் தேதி தந்து படத்தில் நடித்த ஐஸ்வர்யா மேடம், அபிராமி மற்ற நடிகர்கள் அனைவருக்கும் நன்றி. இப்படத்தில் உழைத்த அனைத்து தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி. அண்ணன் லோகு எனக்கு நிறைய உதவிகள் செய்தார். படத்தை வெளியிட உதவிய தேவராஜ் அண்ணாவுக்கு நன்றி. எல்லோருக்கும் நன்றி.
ஒளிப்பதிவாளர் சரவணன் அபிமன்யு பேசியதாவது..,
ஒரு படத்தின் டிரெய்லர் எவ்வளவு முக்கியம் என எல்லோருக்கும் தெரியும். படம் மிக நன்றாக வந்துள்ளது. அர்ஜூன் , ஐஸ்வர்யா மேடம் நிறைய சப்போர்ட் செய்தார்கள். படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள்.
நடிகர் லோகு பேசியதாவது..,
ஒரு பெரிய படத்தில், இவ்வளவு பெரிய நட்சத்திர பட்டாளம் உள்ள படத்தில், எனக்கு வாய்ப்பு தந்த இயக்குநர் தினேஷுக்கு என் நன்றிகள். தயாரிப்பாளர் அருள்குமார் பட்ட கஷ்டத்தை நான் நேரில் பார்த்துள்ளேன், அவர் குழந்தை மனதுக்காரர், அவர் மனதுக்கு இப்படம் பெரிய வெற்றி பெற வேண்டும். அனைவரும் இப்படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.
இசையமைப்பாளர் பரத் ஆசிவகன் பேசியதாவது..,
தினேஷ் அண்ணனை பல வருடங்களாகத் தெரியும். நான் அஸிஸ்டெண்டாக வேலை பார்த்து வந்தேன். நிறையப் படத்தில் வேலை பார்த்தாலும் கிரடிட் கிடைக்காது. எனக்கு வாய்ப்பு தந்ததற்கு தினேஷ் அண்ணனுக்கு நன்றி. தயாரிப்பாளர் அருள்குமார் சாருக்கு நன்றி. நான் நன்றாக வேலை பார்த்துள்ளேன் என நம்புகிறேன். அர்ஜூன் சார் படம் பார்த்து வளர்ந்தவன் நான் அவர் படத்திற்கு வேலை பார்த்தது மகிழ்ச்சி. படத்தில் நாலு பாடல்கள், எல்லாம் நன்றாக வந்துள்ளது. நேற்று அர்ஜூன் சாருக்காக ஒரு பாடல் செய்தோம், கெனிஷா பாடித்தந்தார். பாடல் அனைவருக்கும் பிடிக்கும், படம் நன்றாக வந்துள்ளது அனைவரும் ஆதரவு தாருங்கள். நன்றி.
தயாரிப்பாளர் பி எல் தேனப்பன் பேசியதாவது..,
இயக்குநர் தினேஷ் மிகக் கடின உழைப்பாளி. அவருக்கு இந்தப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள். தயாரிப்பாளர் பூ வியாபாரி என்றார்கள். அவர் பெரிய வெற்றி பெற்று கோயம்பேட்டில் கடை போட வாழ்த்துக்கள். அர்ஜூன் சார் படம் பார்த்ததாக சொன்னார்கள். நான் சின்ன வயதில் சங்கர் குரு பார்த்தேன் இன்றும் அப்படியே இருக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு படம் ஒத்துக்கொள்வது கடினம். இருவரும் சேர்ந்துள்ள இப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
பிராங்ஸ்டர் ராகுல் பேசியதாவது..,
தினேஷ் அண்ணன் எவ்வளவு கஷ்டப்பட்டார் என எனக்குத் தெரியும். இந்தப்படத்தில் ஒரு காமெடி கேரக்டர் செய்துள்ளேன், வாய்ப்பு தந்ததற்கு நன்றி. அர்ஜூன் சாருடன் நடித்தது மிகப்பெரிய மகிழ்ச்சி. அனைவருக்கும் நன்றி. நான் ஒரு படம் இயக்கி வருகிறேன் அதற்கும் ஆதரவு தாருங்கள், இப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் நன்றி
நடிகை அபிராமி பேசியதாவது..,
இயக்குநர் தயாரிப்பாளர் அனைவருக்கும் நன்றி. எனக்கு வாய்ப்பு தந்ததற்கு நன்றி. ஐஸ்வர்யா எப்போதும் மிக இனிமையானவர். அவருடன் நடித்தது மகிழ்ச்சி. அர்ஜூன் சாரை எப்போது பார்த்தாலும் ஸ்டைலாக இருக்கிறார். அவர் படத்தில் இருப்பது மகிழ்ச்சி. நான் ஒரு அம்மாவாக நடித்துள்ளேன். குழந்தைகள் வளர்ப்பு பற்றி விழிப்புணர்வை இப்படம் தரும் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
நடிகர் தங்கதுரை பேசியதாவது..,
இயக்குநர் தினேஷ் இப்படத்திற்காகக் கடுமையாக உழைத்துள்ளார். இப்படத்தில் எனக்கே தெரியாத பல லோகேஷன்களை சென்னையில் காட்டினார். எனக்கு நல்ல ரோல் தந்துள்ளார். அர்ஜூன் சாரின் தீவிர ரசிகன். சின்ன வயதில் அவரை நானும், என் நண்பர்களும் போலீஸ் எனத்தான் நினைத்தோம். அவர் படம் பார்த்தால் நாட்டுப்பற்று வரும். அவருடன் நான் நடித்தது எனக்கு பெருமை. ஐஸ்வர்யா ஒரு வெர்சடைல் ஆக்டர் அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடன் நடித்தது மகிழ்ச்சி. இப்படம் மிக நன்றாக வந்துள்ளது. அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.
நடிகை பிரியதர்ஷிணி பேசியதாவது..,
எழுத்தாளர் அஜயன் பாலா பேசியதாவது..,
தமிழில் வரவர எல்லாம் ஆங்கிலத்தில் தலைப்பு வைக்கும் போது, தமிழ் தலைப்பு வைத்துள்ள இந்த குழுவிற்கு நன்றி. தயாரிப்பாளரைப் பார்க்க மிக மகிழ்ச்சியாக உள்ளது. இம்மாதிரி தயாரிப்பாளர்கள் பெரிய அளவில் வர வேண்டும். அர்ஜூன் சாரை திரையில் பார்க்கப் பொறாமையாக உள்ளது. உடலை அவ்வளவு கட்டுக்கோப்பாக வைத்துள்ளார். எல்லோருக்கும் முன்னுதாரணமாக இருக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் மிக நல்ல நடிகை. இசையமைப்பாளர் மிக அற்புதமான பாடல்களைத் தந்துள்ளார். இந்தப்படம் வெற்றி பெற எல்லா அம்சங்களும் படத்தில் உள்ளது. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
இயக்குநர் எஸ் ஆர் பிரபாகரன் பேசியதாவது..,
அறிமுக இயக்குநர் தினேஷுக்கு வாழ்த்துக்கள். அவருக்கு வாய்ப்பு தந்த தயாரிப்பாளருக்கு நன்றி. அர்ஜூன் சாரின் மிகப்பெரிய ரசிகன், தமிழ் நாட்டிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினியாக இருக்கலாம் தென்னிந்தியாவில் மிகப்பெரிய ஸ்டார் அர்ஜூன் சார் தான். அட்டகத்தி படத்திலிருந்து ஐஸ்வர்யா மேடம் வளர்ச்சியைப் பார்த்து வருகிறேன். இன்று சோலோ ஹீரோயினாக வளர்ந்துள்ளதற்கு அவரின் நம்பிக்கையும் உழைப்பும் தான் காரணம். அவர் ஒரு படத்தை ஓகே செய்தால் அந்தப்படம் வெற்றி எனலாம். சரியானதை மட்டுமே செய்யும் இருவர் இப்படத்தில் இருக்கிறார்கள். படம் கண்டிப்பாக வெற்றி பெற வாழ்த்துக்கள். தமிழ் தயாரிப்பாளர் சங்கத்தில் பெரிய ஹீரோக்கள் படத்தில் வெற்றி தோல்வியில் பங்கு கொள்ள வேண்டும் என தீர்மானம் போட்டுள்ளார்கள் அதை நான் வரவேற்கிறேன். தமிழ் திரையுலகில் நிறையப் பிரச்சனைகளைச் சரி செய்ய வேண்டியுள்ளது. புது தயாரிப்பாளர்கள் பலர் திணறுகிறார்கள். இந்த நிலை மாற வேண்டும். இதற்குத் தீர்வு காண வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன் நன்றி.
வேலூர் திரையரங்கு உரிமையாளர் வி எம் தேவராஜ் பேசியதாவது..,
நான் படம் பார்த்துவிட்டேன் அர்ஜூன் சார் மிக அற்புதமாக நடித்துள்ளார். படம் அருமையாக வந்துள்ளது. பத்திரிக்கையாளர்கள் ஆதரவு தர வேண்டும். சக்ஸஸ் மீட்டில் இன்னும் அதிகம் பேசுகிறேன். தயாரிப்பாளருக்கு இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியைத் தரும் நன்றி.
தவெக கொள்கை பரப்பு செயலாளர் ராஜ் மோகன் பேசியதாவது..,
சினிமாவில் கனவுகளோடு அலைபவர் தான் தம்பி தினேஷ். அவர் சொன்ன கதையை நம்பி அவருக்கு வாய்ப்பு தந்த அர்ஜூன் சாருக்கு நன்றி. நடிகைக்கென போடப்பட்ட வட்டத்திற்குள் சிக்காத ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்கள் இப்படத்தில் சிறப்பாக நடித்துள்ளார். இப்படத்தில் குழந்தை நட்சத்திரம் மிக அற்புதமாக நடித்துள்ளார். வீடும் நாடும் நன்றாக இருக்க வேண்டுமானால் குழந்தைகள் நலமாக இருக்க வேண்டும் என ஒரு கருத்தைச் செய் நேர்த்தியுடன் செய்துள்ள தினேஷுக்கு வாழ்த்துக்கள். இப்படத்தில் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்.
விசிக கட்சி துணை பொதுச் செயலாளர் திரு வன்னியரசு பேசியதாவது..,
தினேஷ் இலெட்சுமணனுக்கு என் வாழ்த்துக்கள். இப்படத்தில் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள். கலைஞர் தமிழில் தலைப்பு வைத்தால் வரிவிலக்கு என அறிவித்தார். இப்போது அவரது மகன் ஆட்சியில் இருக்கிறார். இன்று அருமையான தமிழில் தலைப்பு வைத்துள்ள, நல்ல கருத்தைச் சொல்லும் இம்மாதிரி படங்களுக்கு வரிவிலக்கு தர வேண்டுமென முதல்வரைக் கேட்டுக்கொள்கிறேன். குற்றவாளிகள் எப்படி எளிதாக தப்பிக்கிறார்கள், அரசும் அதிகார வர்க்கம் எப்படி துணை போகிறது என்பதை இப்படம் பேசுகிறது. இதில் உண்மையான நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் மிகச்சிறப்பான ஆக்சன் நாயகியாக நடித்துள்ளார். ஆக்சன் கிங் அர்ஜூனை பக்கத்தில் வைத்து அவர் ஆக்சனில் நடித்திருப்பது சிறப்பு. ஆக்சன் கிங் அர்ஜூன், இப்படத்திற்கு முழு ஆதரவு தரும் அவரது பண்புக்கு வாழ்த்துக்கள். அடுத்தடுத்து இப்படக்குழு மிகப்பெரிய படங்கள் செய்து ஜெயிக்க வாழ்த்துக்கள்.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியதாவது..,
மீடியா நண்பர்களுக்கு என் முதல் நன்றி. எங்களை வாழ்த்த வந்த அனைத்து பெரியவர்களுக்கும் நன்றி. இப்படம் ஒரு உண்மையான சம்பவம், இயக்குநர் சொன்ன போது எனக்கு உடல் நடுங்கி விட்டது. உண்மையான கதையைச் சொல்லும் போது மக்கள் நெருக்கமாக உணர்வார்கள். அவர்களுக்குப் பெரிய விழிப்புணர்வை அது தரும். கமர்ஷியல் சினிமா உலகில் இப்படி உண்மைக் கதையை சொல்ல முயற்சித்த தினேஷுக்கு நன்றி. அர்ஜூன் சார் ரியல் லைஃபில் உண்மையாகவே ஜெண்டில்மேன். அவர் மேஜிக்கை நேரில் பார்த்தது நல்ல அனுபவம். நான் நன்றாக ஃபைட் செய்ய அவர் தான் காரணம். அவர் தான் இந்தப்படத்தில் ஹீரோ. உங்கள் எல்லோருக்கும் படம் பிடிக்கும். இப்படம் திரைக்கு வரும் போது, அனைவரும் உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.
சட்டத்தை தாண்டி நியாயம் இருக்கும், நியாயத்தை தாண்டி தர்மம் இருக்கும், ஆனால் இறுதியில் தர்மமே ஜெயிக்கும் எனும் கருத்தை மையமாகக் கொண்டு, ஒரு அதிரடி ஆக்சன் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது.
‘ஆக்சன் கிங்’ அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில், அபிராமி வெங்கடாசலம், பிரவீன் ராஜா, லோகு. Npks, ராம் குமார், தங்கதுரை, பேபி அனிகா, பிராங்க்ஸ்டர் ராகுல், பிரியதர்ஷினி, சையத், G.K. ரெட்டி, P.L. தேனப்பன், O.A.K. சுந்தர், வேலா ராமமூர்த்தி, பத்மன் மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர்.
சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பரத் ஆசிவகன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை லாரன்ஸ் கிஷோர் மேற்கொள்ள, கலை இயக்கத்தை அருண்சங்கர் துரை கவனித்திருக்கிறார்.
இப்படம் தமிழ், தெலுங்கு மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில், நவம்பர் 21 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.