*ROTARY CLUB INSTALLATION CEREMONY

306

சென்னை கே.கே.நகரில் செயல்பட்டு வரும் ரோட்டரி சங்கத்தின் புதிய தலைவராக கே.சுரேந்தர் ராஜ் பதவி ஏற்பு

 

ரோட்டரி சங்கங்கள் சமுதாயத்தில் மக்களுக்கு தங்களால் இயன்ற பல்வேறு விதமான உதவிகளை, நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதம் ரோட்டரி சங்கத்திற்கு புதிய தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி ஏற்பது வழக்கமான ஒரு நடைமுறை.

அந்த வகையில் சென்னை கே.கே.நகரில் கடந்த 23 வருடங்களாக செயல்பட்டு வரும் ரோட்டரி சங்கத்தின் புதிய தலைவராக கே.சுரேந்தர் ராஜ் பதவியேற்றுள்ளார். இதற்கான பதவி ஏற்பு விழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் வருங்கால ரோட்டரி கவர்னர் மகாவீர் போத்ரா, முன்னாள் ரோட்டரி கிளப் மாவட்ட கவர்னர் ஏ.பி.கண்ணா, தொழிலதிபர் எம்.கருப்பையா என்கிற ராஜா, கே.தேன்மொழி ,கே.கே.நகர் ரோட்டரி செயலாளர் ஹன்னா ஜோன், , சமையற்கலை நிபுணர் வெங்கடேஷ் பட் மற்றும் அனைத்து பகுதி ரோட்டரி தலைவர்கள், செயலாளர்கள் பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

முன்னாள் ரோட்டரி கிளப் மாவட்ட கவர்னர் ஏ.பி.கண்ணா பேசும்போது :“சென்னையில் கே.கே.நகர் ரோட்டரி கிளப் கடந்த  23 வருடங்களாக சமுதாயத்திற்கு தேவையான பணிகளை தொடர்ந்து சிறப்பாக செய்து வருகிறது. இங்கே கிட்டத்தட்ட 50 உறுப்பினர்கள் இருக்கிறோம். இந்த வருடம் புதிய தலைவராக கே.சுரேந்தர் ராஜ் பதவியேற்றுள்ளார். சமுதாயத்தில் மாற்றத்தை கொண்டு வர ஆவலுடன் இருக்கிறோம். கிரியேட் ஹோம் என்பது தான் இந்த வருடத்தின் எங்களது தீம்.

கடந்த பல வருடங்களாக உலகெங்கிலும் போலியோ தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம், இந்தியாவில் மட்டுமல்ல உலகெங்கிலும் சுமார் 35 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்து போலியோவை கட்டுப்படுத்தி உள்ளோம். இன்னும் பாகிஸ்தான், நைஜீரியா உள்ளிட்ட சில நாடுகளில் மட்டும் போலியோவை இல்லாமல் செய்யும் முயற்சிகளை மேற்கொண்டு அதற்காக நிதி திரட்டும் பணிகளிலும் ஈடுபட்டுள்ளோம்.

தமிழ்நாட்டில் பல இடங்களில் ஹெல்த் கேம்ப் நடத்தி வருகிறோம். நிறைய மருத்துவமனைகளுக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் வழங்கி உள்ளோம். கண் மற்றும் இதய அறுவை சிகிச்சைக்கு உதவி செய்து வருகிறோம். சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்ச்சி நிகழ்ச்சிகளை நடத்துகிறோம். மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு முகாம்களையும் நடத்தி வருகிறோம்” என்று கூறினார்.

வருங்கால ரோட்டரி கவர்னர் மகாவீர் போத்ரா பேசும்போது, “இந்த பதவியேற்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டதில் மகிழ்ச்சி. உலகெங்கிலும் உள்ள 204 நாடுகளில் சுமார் 36,800 எண்ணிக்கையிலான ரோட்டரி சங்கங்களும் அதில் 14 லட்சம் உறுப்பினர்களும் இந்த சமுதாய பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவிட் காலகட்டத்தில் தமிழக முதல்வர் தலைமையில் 3 கோடியே 60 லட்சம் மதிப்பிலான, கிட்டத்தட்ட 36,000 பேருக்கு அரிசி பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கோவிட் கிட்டை  ஒரே மாதத்திற்குள் அந்த கடினமான சூழலிலும் ஒவ்வொரு வீடு தேடி சென்று வழங்கினோம். கே,கே நகர் ரோட்டரி சங்கம் ரொம்பவே பழமையானது. சமுதாயத்திற்கு பல நல்ல விஷயங்களை செய்து வருகிறது” என்று கூறினார்.

கே.கே.நகர் ரோட்டரி சங்கத்திற்கு புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள கே.சுரேந்தர் ராஜ் கூறும்போது, “என்னை நம்பி இந்த பொறுப்பை அளித்த எங்களுடைய உறுப்பினர்களுக்கு நன்றி. ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்களுடன் இந்த வருடத்தில் செயல்படுத்த உள்ள நலத்திட்ட உதவிகளை ஒன்றன்பின் ஒன்றாக செயல்படுத்த இருக்கிறோம்” என்று கூறினார்.

Leave A Reply

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com