6 பாடங்களிலும் நூற்றுக்கு நூறு – திண்டுக்கல் கூலித் தொழிலாளி மகள் நந்தினி வரலாற்று சாதனை
தமிழ்நாட்டில் இதுவரை பிளஸ்டூ தேர்வுகளில் இல்லாத ஒரு வரலாற்று சாதனையை திண்டுக்கல் மாவட்ட மாணவி நந்தினி படைத்துள்ளார். பிளஸ் டூ தேர்வில் அனைத்து பாடங்களிலும் 100-க்கு 100 மதிப்பெண்கள்
திண்டுக்கல் நகரில் உள்ள அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் LKG முதல் படித்து வருபவர் சரவணக்குமார்- பானுபிரியா தம்பதியர் மகளான நந்தினி, தமிழ், ஆங்கிலம், பொருளியல், கணக்குப்பதிவியல், வணிகவியல் மற்றும் கணினி பயன்பாடு ஆகிய பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று, மொத்த மதிப்பெண்ணாக 600-க்கு 600 மதிப்பெண் வாங்கியுள்ளார்.
இப்பள்ளியின் பள்ளி தாளாளர் ஜெயபால், தலைமை ஆசிரியர் அகிலா, தமிழ் ஆசிரியர் அனுராதா, ஆங்கில ஆசிரியர் தீபா, பிற ஆசிரியர்கள் மரிய சாந்தி ராஜலட்சுமி, அஷ்டலட்சுமி ஆகியோர் தனக்கு ஊக்கமளித்தனர் என்றும் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கு அனைவரும் ஊக்கமளித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தனது வெற்றிக்கு தனது பெற்றோரும் உறுதுணையாக இருந்ததாக மாணவி நந்தினி கூறினார்.
நந்தினி. தமது வரலாற்று சாதனை குறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது: நான் ஒரு கூலித் தொழிலாளியின் மகள். கூலித் தொழிலாளி மகளாகிய என்னால் என்ன செய்துவிட முடியும் என கவலைப்படவில்லை. எனக்கு கல்விதான், படிப்புதான் சொத்து என என் பெற்றோர் சொல்லி சொல்லி வளர்த்தனர். அதனையே நானும் இடைவிடாமல் கடைபிடித்தேன். அதனால்தான் இவ்வளவு மதிப்பெண்களை என்னால் பெற முடிந்துள்ளது. நம்பிக்கையுடன் முயற்சித்தால் அனைத்தும் சாத்தியமாகும். எனக்கு ஆடிட்டராக வேண்டும் என்பது விருப்பம். அதற்கான மேல்படிப்புகளை படிக்க உள்ளேன். இவ்வாறு மாணவி நந்தினி கூறினார்.
