‘வருங்கால சினிமா’விற்கு உதவிக்கரம் நீட்டிய ‘ஃபெப்சி ‘ சிவா!
“இடது கை கொடுப்பது வலது கைக்கு தெரியாமல் கொடுக்க வேண்டும்”என்பது சான்றோர்களின் குணம் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அதாவது தான, தர்மங்களை செய்யும் போது உதவி செய்பவரின் ஊர், பெயர், விலாசம் இன்றி, உதவுவதை ஒன்றை மட்டுமே குறிக்கோளாக செய்து முடிக்க வேண்டும் என்பதே இதன் பொருள். இன்று உலகமே கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கித்தவிக்கும் இந்த கொடுமையான நேரத்தில், ‘வருங்கால சினிமா’ அதாவது உதவி, இணை, துணை இயக்குனர்களின் பசியை தொடர்ந்து தீர்த்து வருகிறார் ஃபெப்சி ஜி. சிவா. அவர் தனது சொந்த செலவில் தொடர்ந்து 40 நாட்களுக்கும் மேலாக நாள் ஒன்றுக்கு 300க்கும் மேற்பட்டவர்களுக்கு உணவு அளித்து வருகிறார். சாலிகிராமம், வடபழனி, நேசப்பாக்கம், கே.கே. நகர் பகுதிகளுக்கு நேரில் சென்று உணவு அளித்து வருகின்றனர்.
அது மட்டுமல்லாமல் மொபைல் போன் ரீசார்ஜ், கூகுள்பே அக்கவுண்டுக்கு பணம், முதியவர்களுக்கு மருத்துவ பொருட்கள் போன்ற உதவிகளை ராஜா கார்த்திக் மற்றும் நண்பர்கள் செய்து வருகின்றனர். மேலும் பெப்சி சிவா ரூ 1,37,000 /- (ஒரு லட்சத்து முப்பத்தேழாயிரம்) மதிப்புடைய அத்தியாவசிய மளிகை பொருட்களை சினிமா பத்திரிகையாளர் சங்கத்திற்கு வழங்கியுள்ளார்.
அவர் தன்னுடைய நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும் அனுப்பியிருந்த வாய்ஸ் மெசேஜில், எப்போதுமே உதவி, இணை, துணை இயக்குனர்கள், ஒளிப்பதிவாளர்கள் பண உதவியை கடனாக மட்டுமே கேட்பது உண்டு. ஏனெனில் அவர்கள் எப்படியாவது சினிமாவில் ஜெயித்து விடுவோம் என்றும், அதன் பிறகு பெற்ற கடனை திருப்பி கொடுப்போம் என்று முழுமையாக நம்புபவர்கள். அவர்களின் எண்ண ஓட்டத்தை நான் நன்கு அறிந்தவன்.
காரணம் நானும் அடிப்படையில் ஒரு உதவி இயக்குனராக தான் என் வாழ்வை தொடங்கியவன். இவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று நானும், ராஜா கார்த்திக்கும் பேசினோம். அப்படிபட்டவர்களுக்கு உதவ வேண்டும் என்ற அடிப்படையில் தான் இதை செய்து வருகின்றோம். உங்களுக்கு நம்பிக்கை அளித்து, தேவையான உதவிகளை செய்ய நான் தயாராக இருக்கின்றேன். கட்டுப்பாடுகளையும், சில பிரச்சனைகளையும் தாண்டி தான் இந்த உதவியை தொடர்ந்து செய்து வருகின்றோம். தொடர்ந்து செய்வோம் என்ற நம்பிக்கை உள்ளது. இது சாத்தியமாவதற்கு என்னோடு துணை நின்று உதவும் அன்பு உள்ளங்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். குறிப்பாக ராஜா கார்த்திக், பாக்யராஜ், வேல்முருகன், அசோக்குமார், ரமணி, பார்த்தசாரதி, வேணுகோபால் மற்றும் பலருக்கு நன்றி. இத்தகைய உதவிகளை களத்திற்கு சென்று செய்து வருபவர்களுக்காகவே இந்த பதிவு.
நான் எனது குடும்பத்திற்கு செய்யும் உதவியாகவே இதனை பார்க்கிறேன். நான் உங்களோடு ஒருவனாக இருப்பது மன நிறைவைத் தருகின்றது என்று அந்த வாய்ஸ் மெசேஜில் ‘ஃபெப்சி ‘ சிவா கூறியிருக்கிறார். ‘ஃபெப்சி ‘ சிவா ஒரு ஒளிப்பதிவாளரும் கூட. இது தவிர அவர் ‘ஃபெப்சி ‘யின் தலைவராக, செயலாளராகவும் பணியாற்றினார் என்பது நினைவிருக்கும். ஆல் இந்தியா ஃபிலிம் எம்பிளாயீஸ் காண்பிடெரஷன் அமைப்பின் தலைவராகவும் இருக்கிறார். கடந்த 2008 ஆம் ஆண்டு ‘தனம்’ என்ற படத்தை ‘ஃபெப்சி ‘ சிவா இயக்கியுள்ளார்.
மறைந்த இயக்குனர் சிகரம் கே பாலசந்தரிடம் ‘ஃபெப்சி ‘ சிவா உதவி இயக்குனராக இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது தனது சொந்த SNS மூவீஸ் பட நிறுவனம் சார்பில் ‘ஃபெப்சி ‘ சிவாவின் மனைவி கொளசல்யா ராணி தயாரிக்கும் படம் ‘தமிழரசன்’. இப்படத்தை பாபு யோகேஸ்வரன் எழுதி இயக்கியுள்ளார். விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைத்துள்ளார். கதாநாயகியாக ரம்யா நம்பீசன் நடித்திருக்கிறார். கொரோனா ‘ லாக் டவுன்’ தமிழ் சினிமாவை ஒட்டு மொத்தமாக புரட்டி போட்டு இருக்கும் இந்த நேரத்தில் நடிகர் விஜய் ஆண்டனி, தான் நடித்து வரும் “தமிழரசன்”,“அக்னி சிறகுகள்”, “காக்கி” ஆகிய மூன்று படங்களில் ஒப்புக்கொள்ளப்பட்ட சம்பளத்தில் 25 சதவீதத்தை குறைத்து கொள்ளுமாறு தயாரிப்பாளர்களிடம் கூறி இருப்பது அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.
Fefsi Siva

