“சென்னைப் புத்தகக் காட்சியில் ‘கவிஞர் திருவள்ளுவர்’ என்ற தலைப்பில் நேற்று உரையாற்றினேன்.” Vairamuthu

https://www.facebook.com/share/p/1CGs96ccbr/

சென்னைப் புத்தகக் காட்சியில்
‘கவிஞர் திருவள்ளுவர்’
என்ற தலைப்பில்
நேற்று உரையாற்றினேன்

“திருவள்ளுவர்
ஞானி என்றும் முனிவர் என்றும்
அறிஞர் என்றும் ஆசான் என்றுமே
அறியப்பட்டிருக்கிறார்

உலக வரிசையில்
தலைசிறந்த கவிஞர்களுள்
ஒருவர் திருவள்ளுவர்

அழகு பாடும்போது
கவிதை வரும்;
களம் பாடும்போதும்
காதல் பாடும்போதும்
கவிதை வரும்.
ஆனால் அறம் பாடும்போது
கவிதை வருவது அரிது

ஏனென்றால் அறம் என்பது
ஒரு கட்டளை; ஒரு வாக்குமூலம்
அவ்வளவுதான்

அப்படி அறம் பாடும்போதும்
கவிதையின் கொடியை
உரக்கப் பறக்க விட்டவர்
திருவள்ளுவர்

‘சூதாட்டத்தை
வென்றாலும்கூட விரும்பாதே;
அந்த வெற்றி என்பது
புழுவை விழுங்கப்போன மீன்
தூண்டில் இரும்பை
விழுங்குவது போன்றது’
என்ற பொருளில்

‘வேண்டற்க வென்றிடினும் சூதினை
வென்றதூஉம்
தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று’
என்றெழுதுகிறார்

இப்படி ஓர் உவமைப்பாடு
உலகக் கவிதைகளில்
ஆளப்பெற்றதா என்பது ஐயப்பாடு

ஆசிரியப் பெருமக்கள்
கூறியது கூறாமல்
திருக்குறளிலிருந்து
புதிய பாதையில்
புதையல் எடுக்க வேண்டும்;
கேளாத குறள்களைக்
கற்பிக்க வேண்டும்

அனல் கொண்டதும்
புனல் கொண்டதும்
மணல் கொண்டதும்போக
மிச்சமுள்ள தமிழைத்
தமிழர்கள்
நாட்டுச் சொத்தாகவும்
வீட்டுச் சொத்தாகவும்
பேண வேண்டும்” என்று பேசினேன்

பபாசி அமைப்பின்
செயல் திறம்
மெச்சத் தக்கது

#chennaibookfair2026

Lyricist VairamuthuThiruvalluvar
Comments (0)
Add Comment