Statement from Poochi Murugan reg. Actor Vivek’s Memories

இதுவரை எனது வாழ்க்கையில் எத்தனையோ சந்தர்ப்ப சூழ்நிலைகளை கடந்திருக்கிறேன். ஆனால் இது இதுவரை     சந்தித்திராத ஒன்று.

80களின் இறுதியில் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் தலைகாட்டிருந்த சமயம் அது. விவேக் அவர்கள் அப்போது தான் அறிமுகமானார். நான் பேச நினைப்பதெல்லாம் படத்தில் எனக்கு மிகச் சிறிய வேடம் தான். ஆனால் விவேக்குடன் வந்த அந்த காட்சி எனக்கு நல்ல அடையாளத்தை கொடுத்தது.

விவேக்குடன் பின்னர் பெரிதாக பேசியது இல்லை. ஆனால் கொரோனாவுக்கு முந்தைய சில மாதங்களில் பேசத் தொடங்கினார். கொரோனா காலகட்டத்தில் ரொம்பவே நெருங்கிப்போனோம்.
காலையில் ஒருமுறை மாலையில் ஒருமுறை அழைப்பு வந்துவிடும். பேசுவோம். அந்த வானத்தின் கீழ் இருக்கும் அனைத்தையும் பற்றி அவருடன் பேசலாம். போனை எடுத்ததும் ஒலிக்கும் அந்த பூச்சி சார் என்ற குரல் இன்னும் என் காதில் ஒலித்துக்கொண்டு இருக்கிறது.

கடந்த ஆண்டு இதேபோன்ற ஒரு ஏப்ரல் மாதத்தில் ஒரு நாள் மறுநாள் காலை அழைப்பதாக சொன்ன விவேக்கிடம் இருந்து அழைப்புக்கு பதிலாக அவரது மரண செய்தி தான் வந்தது. என்னால் இந்த நொடி கூட நம்ப முடியவில்லை. எங்கேயோ அவுட்டோர் ஷூட்டிங் சென்றிருக்கிறார். சென்னை திரும்பியதும் அழைப்பார் என்றே நினைத்துக்கொண்டிருக்கிறேன்.

கடந்த 16ந்தேதி விவேக்கின் உதவியாளர் செல் முருகன் அழைத்து ‘நாளை சாரின் முதலாண்டு நினைவு நாள். அவரது நினைவாக அவர் விட்டுச்சென்ற மரம் நடும் பணியை விவேக்’ஸ் கிரீன் கலாம்’ என தொடங்க இருக்கிறோம்’ என்று அழைப்பு விடுத்தார். செல் முருகனிடம் பேசித்தான் விவேக் இல்லாத குறையை தீர்த்துக்கொள்கிறேன்.

ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானம். விவேக்குக்கு நெருக்கமான மிகச்சில நண்பர்களே வந்திருந்தனர். விவேக்கின் நண்பர்களும் அவரது சக நடிகர்களும் அங்கே தான் அந்த கோரிக்கையை வைத்தனர். விவேக் வசித்த தெருவுக்கு அவரது பெயர் சூட்ட வேண்டும் என்று. பேசிக்கொண்டிருக்கும்போதே தகவல் வந்தது. தலைவர் அறிவாலயத்துக்கு வந்திருக்கிறார் என்று அவசரம் அவசரமாக வந்து தலைவர் எதிரில் நின்றேன். கேட்காமலேயே சொன்னேன் நிகழ்ந்ததை. ’ஒரு வருஷம் ஆகிடுச்சா?’ என்றவர் முறையாக ஒரு கடிதம் கொடுக்க சொல்லுங்கள் என்றார். அடுத்த சில நாட்களில் செல் முருகனும் விவேக் குடும்பத்தினரும் முதல்வரை சந்தித்து கோரிக்கை கடிதம் கொடுத்தனர்.

சரியாக 15 வது நாள் இன்று. விவேக் வசித்த தெருவுக்கே அவர் பெயரை சூட்டி அரசாணையே வெளியாகி விட்டது. அந்த அரசாணையில் எனது பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு மாபெரும் கலைஞனை கவுரவிக்க உடனடியாக ஆவன செய்த தமிழினத் தலைவருக்கு நன்றிகள்!
விவேக் நீங்கள் எங்கேயோ இருக்கிறீர்கள் என்று தெரியும். ஆத்ம நண்பனுக்கு கிடைத்த கவுரவம் என்று மகிழ்வதா அவர் இல்லையே என்று கலங்குவதா என்று தெரியவில்லை. எங்கிருந்தோ ‘தேங்ஸ் சி எம் சார்’ என்று சொல்வது மட்டும் கேட்டது.
நீங்கள் எங்கள் மனங்களில் வாழ்கிறீர்கள் விவேக் சார்…

– பூச்சி எஸ்.முருகன்

actor VivekPoochi muruganStatement from Poochi Murugan reg. Actor Vivek's Memories
Comments (0)
Add Comment