SIAA LETTER TO TFPC ( 28.04.2026 )

வணக்கம்,

பார்வை- 28.04.2026 தேதியிட்ட தங்கள் கடிதம்

பொருள்- வருமான பகிர்வு மற்றும் வேலை நிறுத்தம்

பார்வையில் காணும் தங்கள் கடிதம் கிடைக்கப் பெற்றோம்.

கடிதத்தில் தங்கள் குறிப்பிட்டபடி 18.08.2024 தேதி அன்று அக்கார்ட் மெட்ரோபாலிட்டன் விடுதியில் நடந்த சந்திப்பில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தென்னிந்திய நடிகர் சங்கம் இடையில் 2006 ஆம் ஆண்டு கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மறு சீரமைப்பு செய்ய வேண்டும் என்ற பரிந்துரையை தென்னிந்திய நடிகர் சங்கம் முன் வைத்தது.

அதுவே பல சிக்கல்களுக்கு சுமூகமான தீர்வாக அமையும் என்பதை ஏற்றுக் கொண்டு 18.08.2024 தேதியன்று நிகழ்ந்த சந்திப்பில் தங்கள் தரப்பின் பரிந்துரைகளை முன் வைத்ததை நாங்கள் மறுக்கவில்லை.

எனினும், தொடர்ந்து நிகழ்ந்த இரு தரப்பு பரிந்துரைகள் தொடர்பான வரைவோலைகளின் அடிப்படையில் இறுதியாக 05.09.2024 தேதியிட்ட கடிதம் வாயிலாக எங்கள் தரப்பின் இறுதியான ஒப்பந்த விதிகளுக்கான பரிந்துரைகளின் பட்டியலை தங்களிடம் சமர்ப்பித்தோம். அதில் நடிகர்களுக்கான ஊதியம் குறித்த எங்கள் பரிந்துரை தொடர்பாக தங்கள் தரப்பிலிருந்து 02.10.2024 தேதியன்று அளித்த பதில் கீழ் வருமாறு:

‘அனைத்து நடிகர்களுக்கும் சம்பள விகிதம் கீழ்கண்டவாறு ஒரே மாதிரிதான் இருக்க முடியும்.

தவணை விகிதம்-
ஒப்பந்தம் கையொப்பம் செய்தவுடன்
மொத்த சம்பளத்தில் 10 சதவீதம்
25 சதவீதம் படப்பிடிப்பு முடிந்த பின்
மொத்த சம்பளத்தில் 15 சதவீதம்
50 சதவீதம் படப்பிடிப்பு முடிந்த பின்
மொத்த சம்பளத்தில் 15 சதவீதம்
75 சதவீதம் படப்பிடிப்பு முடிந்த பின்
மொத்த சம்பளத்தில் 10 சதவீதம்
100 சதவீதம் படப்பிடிப்பு முடிந்த பின்
மொத்த சம்பளத்தில் 10 சதவீதம்
பின்னனி குரல்பதிவு முடியும் முன்
மொத்த சம்பளத்தில் 40 சதவீதம்

முதல் கட்டம், இரண்டாம் கட்டம் என்று படப்பிடிப்பு நாட்களை பிரிக்க முடியாது. மொத்தமாக கொடுத்துள்ள நாட்களில் எத்தனை நாட்கள் ஒரு நடிகர் நடித்துள்ளார் என்பதின் பேரில் தான் நாம் சம்பளம் கொடுக்க முடியும். அதுவும் குறிப்பிட்ட சதவீத படப்பிடிப்பு முடிந்த பின்.

தயாரிப்பாளர் சங்கம் கொடுத்துள்ள பரிந்துரையின்படி, 60 சதவீதம் மட்டுமே மொத்த படப்பிடிப்பு முடிந்த  பின் தர முடியும். மீதி தொகையை பின்னணி குரல் பதிவு முடியும் முன் வாங்கி கொள்ளலாம். இந்த முறையில் தான் தயாரிப்பாளர்களின் வட்டி செலவு கணிசமாக குறையும்.

பின்னணி குரல் பதிவு இல்லாத நடிகர்கள்/நடிகைகளுக்கு, திரைப்படத்தின் குரல் பதிவு நடக்கும் போது, அவர்களுக்கு பின்னணி குரல் பதிவு முடியும் முன், மீதம் தர வேண்டிய 40 சதவீதம் சம்பளம் தரப்படும். அத்தகைய நடிகர்களுக்கான மீதி சம்பளத்தை வாங்கி தருவது தயாரிப்பாளர் சங்கத்தின் பொறுப்பு.

நாள் கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகர்களுக்கு, 70 சதவீதம் படப்பிடிப்பு நடந்த தினமே சம்பளங்கள் வழங்கப்படும். மீதி 30 சதவீதம் டப்பிங் முன்பு வழங்கப்படும்.  நாள் கணக்கில் சம்பளம்  என்பது, ஒரு திரைப்படத்தில் அதிகபட்சம் மூன்று நாட்கள் மட்டுமே ஷூட்டிங் இருக்கும் நடிகர்களுக்கு மட்டுமே (ருபாய் 50,000/-க்கும் மேல் தினசரி சம்பளம் வாங்கும் நடிகர்கள் மட்டும்) பொருந்தும். மற்ற நடிகர்கள் அனைவரும் (மூன்று நாட்களுக்கு மேல் நடிக்கும்) மொத்த சம்பள முறையில் தான் ஒப்பந்தம் செய்யப்படும்.’

மேற்காணும் தங்கள் பதில் ‘Revenue Sharing’ முறையை அறிவுறுத்தவில்லை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

இதற்கு மாறாக தென்னிந்திய நடிகர் சங்கம் இது தொடர்பாக பதில் அளிக்கவில்லை என்று தங்கள் கடிதத்தில் குறிப்பிட்டது உண்மைக்கு முற்றிலும் புறம்பானது.

மேலும் எங்கள் உறுப்பினர்களான திரு தனுஷ் அவர்கள் மற்றும் திரு சிம்பு அவர்கள் தொடர்பாக அதிகாரப்பூர்வமாக அளிக்கப்பட்ட புகார்களுக்கு எங்கள் தரப்பில் முழு முயற்சி மேற்கொண்டு அதற்கு தீர்வும் காணப்பட்டதை தாங்களும் மறுக்க இயலாது. மாறாக இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக எங்கள் தரப்பு புகார்களுக்கு எந்தத் தீர்வும் வழங்கப்படவில்லை என்பதை நினைவூட்ட விழைகிறோம்.

அத்துடன் 09.11.2025 தேதியன்று தங்கள் சங்கத்தில் பொதுக்குழு நிகழ்ந்ததாகவும் அதில் ‘Revenue Sharing’ குறித்து தீர்மானம் நிறைவேற்றி எங்களுக்கு நேரடியாகவும், ஊடகங்கள் வாயிலாகவும் தெரியப்படுத்தியதாகவும் தங்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள்.

இருப்பினும் அது தொடர்பாக எந்த நேரடி தகவலும் எங்களுக்கு வழங்கப்படவில்லை என்பதையும், ஊடகச் செய்திகளை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு செயல்படும் வழக்கம் தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு இல்லை என்பதையும், தங்களது புதிய நிர்வாகம் பொறுப்பேற்ற பின்னர் நிகழ்ந்ததாக தங்கள் தெரிவிக்கும் பொதுக்குழுவின் தீர்மானம் குறித்தும் எங்களுக்கு எந்தவித நேரடி தகவல் பரிமாற்றமும் இல்லை என்பதையும் தங்களுக்கு பணிவோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

எனவே ‘Revenue Sharing’ குறித்து தனிப்பட்ட முறையில் இது நாள் வரை எந்தவித பேச்சு வார்த்தையும் நடைபெறவில்லை என்பதை மீண்டும் இதன் மூலம் வலியுறுத்துகிறோம். அது புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கான ஒரு பரிந்துரையாக மட்டுமே இருந்ததையும், இரு தரப்பாலும் அது ஏற்றுக்கொள்ளப்படாமல் நிராகரிக்கப்பட்டதையும் தாங்களும் ஒப்புக் கொள்வீர்கள் என நம்புகிறோம்.

இத்தகைய சூழலில், தென்னிந்திய நடிகர் சங்கம் எவ்வித பதிலும் அளிக்காமல் தாமதப்படுத்துவதாக எங்கள் மீது குற்றம் சாட்டுவது ஏற்புடையதல்ல.

இறுதியாக, 02.05.2026 தேதியன்று தாங்கள் அறிவித்துள்ள அடையாள வேலை நிறுத்தம் தொடர்பான தகவல் எங்களுக்கு தங்களது 27.04.2026 தேதியிட்ட கடிதம் மூலமாகவே கிடைக்கப் பெற்றது. இடைப்பட்ட நான்கு தினங்களுக்குள் படப்பிடிப்பு நிமித்தமாக உலகின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் எங்கள் ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள் அனைவருக்கும் அது குறித்து தெரிவிப்பதும், அதன் பொருள் குறித்து கலந்தாலோசனை செய்து தீர்மானிப்பதும் நடைமுறையில் சாத்தியமல்ல.

இருப்பினும் 27.04.2026 தேதியிட்ட எங்கள் கடிதத்தில் தெரிவித்தபடி தங்கள் வேலை நிறுத்த அறிவிப்பு திரும்பப் பெறப்பட்ட பின், 2026 தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியானதும் பரஸ்பரம் பொருத்தமான ஒரு சந்தர்ப்பத்தில் பேச்சுவார்த்தை நடத்தவும், சுமூக முடிவு காணவும் நாங்கள் ஆயத்தமாக உள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

cinema newskollywood newsLatest Cinema Newslatest kollywood newslatest tamil cinema newsSIAAtamil cinema newsTFPC
Comments (0)
Add Comment