Audio Launch Event Stills and News of Ravi Maria and Radha Ravi’s ‘Makkal Thalaiva’ Movie

 

ரவி மரியா, ராதா ரவி நடிக்கும் ‘மக்கள் தலைவா’ படத்தின் இசை வெளியீட்டு விழா

கவிதாலயா சரவணன் கிரியேசன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் ராம் தேவ் இயக்கத்தில் இயக்குநரும், நடிகருமான ரவி மரியா கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘மக்கள் தலைவா ‘ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

இயக்குநர் ராம் தேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மக்கள் தலைவா’ திரைப்படத்தில் ரவி மரியா, அக்சரா விஜய், ராதா ரவி, பழ. கருப்பையா, நாஞ்சில் சம்பத், இயக்குநர் பேரரசு, கஞ்சா கருப்பு, கவிதாலயா சரவணன், அக்னி S வருண் மற்றும் பலர் நடித்துள்ளனர். கார்த்திக் எஸ். நாயர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு துளசி ராமன் இசையமைத்திருக்கிறார். காமெடி வித் பொலிடிக்கல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் கவிதாலயா சரவணன் தயாரித்திருக்கிறார். இவருடன் எஸ். வெங்கடேசன்- R சந்திரசேகரன் – T ராம்குமார் ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக உள்ளனர்.

அனைத்து பணிகளும் நிறைவடைந்து திரையரங்குகளில் வெளியிடுவதற்காக திட்டமிடப்பட்டு வரும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் படக் குழுவினருடன் இயக்குநர்கள் கே. பாக்யராஜ், ஆர். கே. செல்வமணி, ஆர். வி. உதயகுமார், எழில் , நந்தா பெரியசாமி, பிருந்தா சாரதி, லியாகத் அலிகான், சி. ரங்கநாதன், ஏ. ஆர். வெங்கடேஷ் வசனகர்த்தா வி. பிரபாகர், இசையமைப்பாளர் தீனா, விநியோகஸ்தர் ஸ்ரீதர், தொழிலதிபர் சுப்புராஜ் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

தயாரிப்பாளர் கவிதாலயா சரவணன் பேசுகையில், ” இந்தப் படத்தின் மூலம் முதன்முதலாக திரையுலகில் அடியெடுத்து வைத்திருக்கிறேன். இப்படத்தில் நடித்திருக்கும் நட்சத்திரங்கள் அனைவரும் என்னுடைய இல்லத்திற்கு வருகை தந்தனர். இதனையே நான் பெரிய வெற்றியாக கருதுகிறேன். இந்த மேடைக்கு சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்திருக்கும் பலரையும் திரையில்தான் நான் பார்த்திருக்கிறேன். அவர்களுடன் இணைந்து ஒன்றாக இந்த மேடையில் இருப்பது பெருமிதமாக இருக்கிறது. திரையுலகத்தை சார்ந்த ஒருவர் தமிழக முதல்வராக பொறுப்பேற்றிருக்கிறார். இதன் மூலம் சிறிய முதலீட்டு தயாரிப்பாளர்களுக்கு ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன். இந்தப் படத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் கடுமையாக உழைத்து தங்களுடைய ஒத்துழைப்பை அளித்துள்ளனர். இந்தப் படம் அரசியல் சார்ந்த காமெடி படம். இந்த படத்தை அனைவரும் திரையரங்குகளில் பார்த்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

இயக்குநர் ராம் தேவ் பேசுகையில், ” வாழ்க்கையில் இந்த தருணத்தை பொக்கிஷமாகவும் சந்தோஷமாகவும் அனுபவிக்கிறேன். ஏனெனில் நான் பார்த்து மிரண்ட திரையுலக ஜாம்பவான்கள் அனைவரும் இந்த மேடையில் ஒன்றாக அமர்ந்துள்ளனர். இவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.

‘மக்கள் தலைவா’ என்ற இந்தப் படத்தின் கதையை முதன்முதலாக இயக்குநர் சி ரங்கநாதன் மூலமாக இயக்குநர் எஸ். ஏ . சந்திரசேகரிடம் சொன்னேன். இந்தப் படத்தின் கதை- பாட்டிலுக்கு பத்து ரூபா வாங்குவது பற்றியது. அவருடன் நீண்ட நேரம் கதையைப் பற்றி விவாதித்தேன். அதில் ஒரு கட்டத்தில் ஹீரோவிற்கு எதிராக அரசியலில் இரு துருவங்கள் ஒன்றிணைவது போன்று வரும். அப்போது இது எப்படி லாஜிக் படி சரியா வரும்? எனக் கேட்டேன். அரசியலில் அதெல்லாம் வரும் என்றார். அதனைத் தொடர்ந்து இந்தப் படத்திற்கு ‘மக்கள் தலைவா’ என்ற டைட்டிலையும் அவர்தான் தேர்வு செய்தார். அவருக்கு இந்த தருணத்தில் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் பகிர்ந்து கொள்ள முடியாத சில காரணங்களால் அவரால் நடிக்க முடியவில்லை.

அதன் பிறகு இந்த கதையில் யாரை நடிக்க வைக்கலாம் என்று பட்டியலிட்டபோது ராதாரவி இடம் பெற்றார். கதையைக் கேட்ட அவர் எனக்கு அரசியல் நன்றாகத் தெரியும் ஆனால் எனக்குத் தெரியாத பல விசயங்களை நீ தெரிந்து வைத்திருக்கிறாய். அதை எப்படி நீ யோசித்தாய்..! என கேட்டுவிட்டு, நடிக்க சம்மதம் தெரிவித்தார். படப்பிடிப்பு தளத்தில் அவர் எதிர்பார்த்ததை விட சிறப்பாக நடித்தார்.‌

அதன் பிறகு இயக்குநர் சி ரங்கநாதன் இந்த கதைக்கு பொருத்தமான ஹீரோ ரவி மரியா தான் என்றார். அதன் பிறகு அவர் அரசியல் மேடையில் பேசிய பேச்சுக்களை இணையத்தில் பார்வையிட்டேன். அப்போதே இந்த கதைக்கு நாயகன் இவர்தான் என தீர்மானித்து விட்டேன். அவரையும் சந்தித்தேன். முதலில் கதாநாயகனாக நடிக்க தயக்கம் காட்டினார். அதன் பிறகு முழு கதையையும் கேட்டுவிட்டு கதையின் நாயகனாக நடிக்க ஒப்புக்கொண்டார். அவருக்கும் நன்றி. அதன் பிறகு பழ. கருப்பையா, நாஞ்சில் சம்பத், இயக்குநர் பேரரசு, கஞ்சா கருப்பு, என ஒவ்வொருவராக இணைந்தனர். அனைவருக்கும் நன்றி ” என்றார் .

இயக்குநர் ஆர். கே. செல்வமணி பேசுகையில், ” 1986 ஆம் ஆண்டில் மணிவண்ணன் இயக்கத்தில் வெளியான ‘தீர்த்தக் கரையினிலே’ என்ற படத்திற்கு தயாரிப்பாளர் பழ. கருப்பையா. அந்தப் படத்தில் நான் உதவி இயக்குநர். நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு அவரை இந்த மேடையில் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த நிகழ்விற்கு ஏராளமான திரையுலக பிரபலங்கள் வருகை தந்திருக்கிறார்கள் என்றால்.. அதற்கு ரவி மரியாவின் நட்புதான் காரணம். ரவி மரியா சிறந்த நடிகர் மட்டுமல்ல சிறந்த பண்பாளர். அனைவருக்கும் உதவி செய்யும் தாராள மனப்பான்மை கொண்டவர். சிறந்த படைப்பாளியும் கூட. இயக்குநர் சங்கத்தின் பொறுப்பில் இருந்தபோது உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக கேட்டவுடன் எந்தவித தயக்கமும் இல்லாமல் லட்சக்கணக்கான ரூபாயை நன்கொடையாக வழங்கியவர்.

இந்தப் படத்தில் அவர் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இங்கு திரையிடப்பட்ட இரண்டு பாடல்களும் சிறப்பாக இருந்தது. இசையமைப்பாளர் துளசிராமனுக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது. அவரையும் வாழ்த்துகிறேன்.

இந்தப் படத்தின் டிரைலர் திரையிடப்படவில்லை. ஏனென்று கேட்டபோது.. சென்சார் பிரச்சனை என்றார்கள். பொதுவாக இது போன்ற பிரிவியூ தியேட்டர்களில் ட்ரெய்லரை திரையிடும்போது யாரும் சென்சார் சர்டிபிகேட்டுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஆனால் அதே தருணத்தில் படம் சற்று வில்லங்கமாக இருந்தால் பிரிவ்யூ தியேட்டரில் திரையிடுவதற்கு தயக்கம் தெரிவிப்பார்கள். அப்படி என்றால்… இந்தப் படத்தில் ஏதோ வில்லங்கம் இருக்கிறது என்று தெரிகிறது.‌

பத்து ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ‘தலைவா’ படத்திற்கும் சென்சார் பிரச்சனை இருந்தது. தற்போது தயாராகி இருக்கும் ‘மக்கள் தலைவா’ படத்திற்கும் சென்சார் பிரச்சனை இருக்கிறது.

ஆனால் நாங்கள் படத்தை இயக்கிய போது எங்களுக்கு அத்தகைய நெருக்கடி இருந்ததில்லை. ‘மக்களாட்சி’ என்ற அரசியல் படத்தை இயக்கிய போது எனக்கு எந்தவித சிக்கலும் ஏற்பட்டதில்லை. அப்போது படைப்பாளிகளுக்கு சிறிதளவு சுதந்திரம் இருந்தது என நினைக்கிறேன். ஆனால் தற்போது உள்ள படைப்பாளிகளுக்கு கண்ணுக்குத் தெரியாத ஒரு பயம் சூழ்ந்திருக்கிறது.‌

இந்தப் படத்தை செய்யலாமா…? படத்தை இயக்கினால் தணிக்கை செய்வார்களா? தணிக்கை செய்த பின்பு திரையரங்குகளில் வெளியிடுவார்களா? மத்திய அரசு இந்த படத்திற்கு சென்சார் செய்யுமா? அதையும் கடந்து வந்தால் மாநில அரசாங்கம் இந்த படத்தை திரையரங்குகளில் வெளியிட அனுமதிக்குமா.. ?அதையும் கடந்து படம் திரையரங்குகளில் வெளியானால் இங்குள்ள ஜாதி, மத அமைப்புகள் ஏதேனும் பிரச்சனைகளை ஏற்படுத்தி படத்தை நிறுத்தி விடுவார்களா? என பல விசயங்கள் இருக்கிறது.

ஒரு படைப்பாளி ஒரு உண்மையை சொல்வதற்கு ஏராளமானவர்களுக்கு பயப்பட வேண்டிய சூழல் இன்று இருக்கிறது.

உண்மையை தவிர வேறு எதை வேண்டுமானாலும் திரைப்படங்களில் பேசலாம். உண்மையைப் பேசினால் மட்டும்தான் அந்தத் திரைப்படம் வெளியில் வருவதற்கு கஷ்டம். பொய்யை பேசலாம்… கற்பனையைப் பேசலாம் …ஆபாசத்தை பேசலாம்… அருவெறுப்பை பேசலாம்… வன்முறையை பேசலாம்… கலாச்சார சீரழிவை பற்றி பேசலாம்… ஆனால் உண்மையை மட்டும் பேசக்கூடாது. மீறி பேசினால் அந்தப் படம் இந்தியாவில் வெளியாவது கஷ்டம். இதனை நான் உணர்ந்து தான் சொல்கிறேன். இதற்கு மிகப்பெரிய உதாரணம் எனது இயக்கத்தில் உருவான ‘குற்ற பத்திரிக்கை’. இந்தப் படம் என் வாழ்க்கையே திசை மாற்றிய படம்.

இன்றுள்ள படைப்பாளிகள் எப்படி இந்த விசயத்தை சொல்வது என்பதை தெரிந்து கொண்டிருக்கிறார்கள். அதனை கொஞ்சம் காமெடியாக சொல்லத் தொடங்கி இருக்கிறார்கள். அந்த வகையில் ‘மக்கள் தலைவா’ படம் உருவாகி இருக்கிறது. அதிலும் நாஞ்சில் சம்பத்- பழ கருப்பையா- ராதாரவி – என அரசியல்வாதிகள் நடித்திருக்கிறார்கள். அதனால் இந்த படத்தில் ஏதோ ஒரு விசயம் இருக்கிறது என்பது மட்டும் தெரிகிறது.

நட்பிற்கு இலக்கணமாக திகழும் ராதாரவி. இந்தப் படத்தைப் பற்றியும், இதில் பணியாற்றிய கேமராமேனை பற்றியும் பாராட்டி பேசினார். சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்களுக்கு அவர் ஒரு சூப்பர் ஸ்டாரான கேமரா மேன் என குறிப்பிட்டார். எனக்கு கேமரா மேன் கார்த்திக் பற்றி எதுவும் தெரியாது. ஆனால் அவருடைய வேலையைப் பற்றி ராதாரவி சொன்ன பிறகுதான் அவருடைய திறமையை நான் தெரிந்து கொண்டேன். இந்தப் படத்துக்குப் பிறகு அவருக்கும் பெரிய எதிர்காலம் உள்ளது.

இந்த படத்தின் டைட்டில் ‘மக்கள் தலைவா’ மட்டுமல்ல.. அதன் கீழ் ‘ஃபார் சேல்’ என இடம் பிடித்திருக்கிறது. இதைப் பற்றி புரிந்தவர்களுக்கு நன்கு தெரியும். இப்படி யோசிப்பதற்கு ஒரு துணிச்சல் வேண்டும். அதனை டைட்டிலில் டேக் லைனாக இடம்பெறச் செய்வதற்கும் ஒரு தைரியம் வேண்டும். நாம் அரசியலில் யாரையும் குறை சொல்லப் போவதில்லை. ஆனால் ஒரு பாட்டிலுக்கு பத்து ரூபாய் என்பதை பலர் சொல்லிக் கொண்டிருந்தனர். படத்தில் இந்த கதாபாத்திரத்தில் பேரரசு நடித்திருக்கிறார்.

நடிகர் ரவி மரியாவிற்கு இடுப்பு வளையாது. ஆனால் இந்த படத்தில் அவர் ஹீரோயினுடன் பாடல் காட்சியில் நன்றாக டான்ஸ் ஆடி இருக்கிறார். அவருடைய நல்ல மனதிற்கும் நகைச்சுவையான படம் என்பதாலும் இந்த படம் பெரிய வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்” என்றார்.

இசையமைப்பாளர் – பாடலாசிரியர் துளசி ராமன் பேசுகையில், ” இது என்னுடைய முதல் மேடை. மூன்று திரைப்படங்களுக்கு இசை அமைத்திருக்கிறேன்.

ஜாதி, மதம், மொழி, இனம், இவைகளை விட பவர்ஃபுல் சினிமா. இன்னும் நிறைய முதல்வர்களை கொடுக்க இருக்கும் சினிமா. சினிமா சாதாரணமான கலையல்ல. மனிதர்களின் கனவுகளை தாங்கும் வொண்டர்ஃபுல் வொண்டர் வேர்ல்ட். இதில் இன்று ‘மக்கள் தலைவா’ என்ற புதிய லைட் உருவாகி இருக்கிறது. இந்த லைட்டை கொடுத்த தயாரிப்பாளர் கவிதாலயா சரவணனுக்கு நன்றி. இதற்கு கரண்ட் கொடுத்த இயக்குநர் ராம்தேவுக்கு நன்றி.

மக்கள் சக்தி சூரியன் தான். அதன் வெளிச்சம் கேட்கும் கலைஞன் நான். விதியை எழுதியது கடவுள் தான். அந்த விதியை மாற்றி அமைப்பது மக்கள் தான். அதனால் தான் மக்களாகிய உங்களிடம் பணிவுடன் கேட்கிறேன் எனக்கு ஆதரவு தாருங்கள். என் பாடலுக்கும் ஆதரவு தாருங்கள். மக்களை மனதை மயக்கி, கொள்ளை கொள்ளும்.. காலத்தை வெல்லும்.. இன்னும் நிறைய பாடல்கள் என்னிடம் இருக்கிறது. அன்பான இயக்குநர்களே! தயாரிப்பாளர்களே! எண்பது மற்றும் தொண்ணூறுகளில் எப்படி அற்புதமான பாடல்கள் வெளியானதோ.. அதனை இன்றுள்ள காலகட்டத்திற்கு ஏற்ப வைப்( Vibe) பாக மெகா ஹிட் கொடுக்கிற பாடல்கள் என்னிடம் இருக்கிறது. இந்த மக்கள் தலைவா படம் காமெடி மூவி. இதனை தியேட்டரில் பாருங்கள். உங்களுடைய டென்ஷன் குறைந்து ஹாப்பி அதிகமாகும்.

ஒரு பாடலாசிரியராக… இசையமைப்பாளராக… இந்த படத்தின் இசைக்காக.. ஒரு சில வார்த்தைகளை பகிர்ந்து கொள்கிறேன்.

இனிமை இனிமை செவிக்கு இனிமை இசை
சிந்தைக்கு இனிமை இசை தாயானாலும் இசை
தவழும் சேயானாலும் இசை.
காதல் மலர்ந்தாலும் இசை
கடவுளை வணங்கினாலும் இசை இன்பத்தின் திறவுகோல் இசை துன்பத்தின் ஆறுதல் இசை
ஆணும் பெண்ணும் சேர்ந்தால் இசை மழலையின் சொல்லும் இசை மக்களையே வெல்லும் இசை.
இசை இல்லா உலகம் இல்லை.
ஆக மொத்தத்தில் இசைக்கு இசையாதவர் எவருமில்லை. ஆகவே இசை தான் வாழ்க்கை. இதுதான் கொள்கை. அளித்தேன் உழைப்பை. அடைந்தேன் சிறப்பை. வென்றேன் மக்களின் அன்பை..” என்றார்.

அரசியல்வாதி -தமிழறிஞர்- தயாரிப்பாளர் – நடிகர்- பழ .கருப்பையா பேசுகையில், ” இயக்குநர் ராம்தேவ் நகைச்சுவையான படத்தை உருவாக்கி இருக்கிறார். படப்பிடிப்பு தளத்தில் ஐந்து நாள் பணியை மூன்று நாளிலேயே விரைவாக நிறைவு செய்யக்கூடிய ஆற்றல் படைத்தவர். இவருக்கு ஒளிப்பதிவாளரும் இணையாக பணியாற்றினார். இயக்குநர் தான் இப்படத்தின் முதல் தயாரிப்பாளர். தொடங்கிய பிறகு இடையில் நின்று விட்டது. தயாரிப்பாளர் தேவைப்பட்டார் அப்போது அவருடைய சொந்த ஊரில் உள்ள தொழிலதிபர் கவிதாலயா சரவணனை பார்த்து பேசி, மயக்கி, அவருக்கு ஒரு கதாபாத்திரத்தை வழங்கி படத்தின் பணிகளை தொடங்கினார். அவருடைய வீட்டிலேயே படப்பிடிப்பு நடைபெற்றது. முழு படமும் அவருடைய வீட்டில் தயாரானது தான். இந்தப் படத்தின் மூலம் தயாரிப்பாளர் கவிதாலயா சரவணனின் அறிமுகமும் நட்பும் கிடைத்தது. அவர் பெரிய செல்வந்தர். எங்களிடம் பேசும் போது நான் இரண்டு முறை அமெரிக்காவிற்கு சென்று திரும்பும் செலவுதான் பரவாயில்லை. நான் தயாரிக்கிறேன் என்றார். அதன் பிறகு தற்போது இந்த படம் வெளியாகும் வகையில் அவர் தன்னுடைய கவனத்தை செலுத்தி வருகிறார்.

இயக்குநர் ராம் தேவிற்கு நன்றாக நகைச்சுவையாக கதையை சொல்லக்கூடிய ஆற்றல் உண்டு. நான் இந்தப் படத்தில் கெடுமதியாளனாக அதாவது வில்லனாக நடித்திருக்கிறேன். பிற வேடங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் நகைச்சுவையாக இந்த படத்தில் தான் நடித்திருக்கிறேன். இதை மிகவும் ரசித்தேன்.

எந்த ஒரு படமும் கதையும் காலத்தை கடந்து நிற்க முடியாது. ‘ஹரிதாஸ்’ திரைப்படம் வந்த காலகட்டத்தில் ‘பராசக்தி’ வந்து மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. அதனால் எவராலும் காலத்தை கடந்து எந்த ஒரு கதையையும் சொல்ல முடியாது. காலத்திற்கு உட்பட்டு காலகட்டத்தில் நடைபெறும் சம்பவங்களை உள்வாங்கி கதையை சொல்கிறவன் வென்று விடுவான்.

கே பாக்யராஜ் ஒரு சிறந்த கதாசிரியர். காலத்தையும் சமூகத்தையும் உள்வாங்கி அதை கதையாக சொல்கிற ஆற்றல் நமக்கு இருந்து, அதை கலை வடிவத்தில் வெளிப்படுத்தும் போது அவை மிகப்பெரிய வெற்றியை பெறும்.

மகாபாரதங்கள் ஏன் மீண்டும் மீண்டும் எழுதப்படுவதில்லை என்று நான் நினைப்பேன். மகாபாரதத்தில் உள்ள தர்ம புத்திரனை உருவாக்க.. சிறந்த இயக்குநர்கள் போதாது. அதற்கு வலிமை வாய்ந்த வியாசரை போன்ற ஒருவர் தான் வேண்டும்.

மூவாயிரம் ஆண்டுகளாக தர்ம புத்திரனுக்கு நிகராக எந்த ஒரு கதாபாத்திரத்தையும் யாராலும் உருவாக்க முடியவில்லை. வாழ்க்கையிலும் சந்திக்கவில்லை. இதிகாசங்களிலும் சந்திக்கவில்லை.. அவனைப் படைப்பதற்கு அவனை விட ஆற்றல்மிக்க கதை தலைவன் வேண்டும். அதனால் தர்ம புத்திரனை வியாசரை தவிர வேறு யாராலும் படைக்க முடியாது.

நான் படித்த கதைகளிலேயே மிகவும் சிறந்த கதை லியோ டால்ஸ்டாய் எழுதிய ‘ரெஸரக்சன்’. டால்ஸ்டாய் காந்திஜிக்கே முன்னோடி. இந்த கதையை நான் பலமுறை வாசித்திருக்கிறேன். இப்படி ஒரு கதை தலைவனை எப்படி ஒரு கதாசிரியரால் உருவாக்க முடியும் என்பதை நான் எண்ணிப் பார்த்தால் … அந்த கதையின் தலைவனே டால்ஸ்டாய் தான்.

நம் காலத்தில் காலத்தின் சரிவை… அரசியலின் இழிவை… வெளிப்படுத்துகின்ற படமாக இந்த படம் அமைந்திருக்கிறது.

சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு புடம் போட்ட தலைவர்கள் நாடாளும் தன்மை வேறு. அவர்கள் அரசியல் என்பது அதிகாரம் என்று கருதியவர்கள் இல்லை. அரசியல் என்பது தொண்டு. அரசியல் என்பது தியாகம். அரசியல் என்பது நேர்மை.. என்று ஒரு 30 ஆண்டு காலம் சிறைகளில் கழித்து, வாழ்ந்து நெறிப்படுத்தப்பட்டு பிறகு ஆட்சித் தலைவனாக வருகிறவர்கள்.

அதற்குப் பிறகு கூட இந்த மண்ணில் கொள்கை சார்ந்த இயக்கங்கள் வளர்ந்தன. அந்த கொள்கையோடு ஊறி திளைத்து தலைவர்களாக மேன்மை அடைகிறார்கள். ஆனால் ஒன்றும் இல்லாமல் அதிகாரத்திற்காக…. அதிகாரத்தை சுவைப்பதற்காக … பெருமைக்காக… என்ற நிலை வந்து விட்ட பிறகு, அரசியலில் வீழ்ச்சி ஏற்பட்டே தீரும். அந்த வீழ்ச்சி ஏற்பட்டது . ஆனால் தமிழ் சமுதாயம் முதிர்ச்சி அடைந்த சமுதாயம். ஆகவே இதிலிருந்து மீட்பதற்காகத்தான் ராம்தேவ் போன்றவர்கள் கதை எழுதுகிறார்கள். இது இன்றைய அரசியல் மோசமாக இருக்கிறது என்று சொல்லவில்லை. மோசமாக இருக்கிறது. இதிலிருந்து தமிழ் சமூகம் மீள வேண்டும் என்பதற்காகத்தான் இந்த கதையை எழுதி இருக்கிறார்கள். இந்த படமும் அப்படித்தான் அமைந்திருக்கிறது.

‘மக்கள் தலைவா ஃபார் சேல்’ என்பது மக்களுக்கு தலைவனாக இருக்கின்றவன் மக்களை வழிநடத்துகின்றவனாக இருக்க வேண்டும். விற்பனைக்கு உரியவனாக இருக்கக் கூடாது என்ற செய்தியை மிகச் சிறப்பாக இயக்குநர் ராம்தேவ் சொல்லி இருக்கிறார். ஆகவே அவரை நான் பாராட்டுகிறேன்.

எனவே கதையின் நாயகன் என்று சொல்வதற்கு ரவி மரியா வெட்கப்பட வேண்டிய தேவையில்லை. இந்த படம் வெற்றி பெற்று விட்டால்… நீங்கள் மிகப்பெரிய கதை தலைவராகி விடுவீர்கள். வெற்றி சார்ந்தது தான் நம்முடைய வாழ்க்கை ” என்றார்.

நடிகை அப்சரா விஜய் பேசுகையில், ” இந்தப் படத்தில் வாய்ப்பு அளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி. படப்பிடிப்பு தளத்தில் ரவி மரியா சார் நடிப்பு , நடனம் என பல விசயங்களில் பயனுள்ள குறிப்புகளை வழங்கினார். இந்தப் படத்தை அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து ஆதரவு தர வேண்டும்” என்றார்.

நடிகர் ரவி மரியா பேசுகையில், ” என்னுடைய அன்பிற்காக, நட்பிற்காக இங்கு வருகை தந்திருக்கும் அனைவருக்கும் நன்றி.

வழக்கமாக நான் அனைத்து படங்களிலும் வில்லனாக நடித்தாலும் காமெடியாக நடித்தாலும் கேரக்டரில் நடித்தாலும் நிறைய பேசுவேன். ஆனால் இந்த படத்தில் கதாநாயகன் என்பதால்.. நிறைய பேசவில்லை. இருந்தாலும் இந்தப் படத்தை அனைவரும் திரையரங்குகளில் பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

நடிகர் கஞ்சா கருப்பு பேசுகையில், ” தயாரிப்பாளர் கவிதாலயா சரவணன் தேனியின் மன்னன்.. சினிமாக்காரர்களின் அண்ணன்.. அவருடைய வீட்டிற்கு விருந்தினர்களாக செல்பவர்களுக்கு உணவு உபசரிப்பதுடன் பெரிய அளவிலான திருப்பதி வெங்கடாஜலபதி புகைப்படத்தையும் பரிசாகத் தருவார். இந்தப் பரிசை சித்தப்பா பேரரசு வாங்கினார். அவர் தலைவர் ஆகிவிட்டார். நானும் வாங்கினேன். விரைவில் தலைவராகி விடுவேன். ‘மக்கள் தலைவா’ படத்தில் நானும் நடித்திருக்கிறேன். அதனால் நானும் தலைவனாகி விடுவேன்.

இயக்குநர் ராம்தேவுக்கு தேவை என்றால் அதிகாலை மூன்று மணிக்கு போன் செய்து பேசுவார். ஒருமுறை அதிகாலை 4 மணிக்கு படப்பிடிப்பு .முதல் காட்சி உங்களது தான். வந்து விடுங்கள் என்றார். நானும் நான்கு மணிக்கு அவர் சொன்ன ஒயின்ஷாப்பிற்கு சென்றேன். கதவு மூடி இருந்தது. யாரும் அங்கு இல்லை. அன்று ஒயின்ஷாப் விடுமுறை. கதவை தட்டியதும் உள்ளே இருந்து ஒருவர் எட்டிப் பார்த்தார். அவர் இன்று பிளாக்கில் சரக்கு கிடைக்காது என்றார். அவரிடம் நான் சரக்கு வாங்க வரவில்லை. நடிக்க வந்திருக்கிறேன். இயக்குநர் இங்கு தான் வர சொன்னார் என்றேன். அதன் பிறகு தயாரிப்பு நிர்வாகி போன் செய்து வந்துவிடுகிறேன் என்றார்.

அப்போது அவரிடம் பேரரசு நடிக்கும் போது கடையை திறந்தீர்கள்… நான் நடிக்கும் போது ஏன் கடையை மூடி வைத்திருக்கிறீர்கள்? என கேட்டபோது.. அவர் வந்த போது ஒரு பாட்டிலுக்கு பத்து ரூபாய் இருந்தது. இன்னைக்கு ஒரு பாட்டிலுக்கு இருபது ரூபாய் எக்ஸ்ட்ராவாக ஏறி இருக்கிறது. இந்த நியாயத்தை நான் யாரிடம் போய் சொல்வது? என கேட்டார்.

இந்தப் படம் வெளியான பிறகு மது பிரியர்கள் அனைவரும் பேரரசு சித்தப்பா வீட்டிற்கு செல்வார்கள். அங்கு ஒரு கொள்கை ஏற்படும். அதன் பிறகு பாட்டில் விலை குறைக்கப்படும்.

தற்போது 9: 45 கெல்லாம் கடையை மூடி விடுகிறார்கள். நான் இந்த ஆட்சியில் டாஸ்மாக் இரவு 12 மணி வரை திறந்திருக்க வேண்டும். அதேபோல் காலையில் 7:00 மணி அளவில் கடையை திறந்து விட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். அங்கங்கே ஒயின் ஷாப் குறைவாக இருக்கிறது. கடைகளை அதிகமாக திறக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

இயக்குநர் கே. பாக்யராஜ் பேசுகையில், ” எந்த பூவின் வாசமும் காற்று எந்த திசையில் வீசுகிறதோ.. அந்த திசையில் தான் பயணிக்கும். ஆனால் ஒரு பூவின் வாசம் மட்டும் காற்றுக்கு எதிர் திசையில் கூட வாசம் வீசும். அது என்னவென்றால் ஒரு மனிதரின் நற்பண்பு. இது ரவி மரியாவிற்கு பொருந்தும். இங்கு பேசிய அனைவரும் ரவி மரியாவின் உதவும் குணத்தையும் , பெருந்தன்மையையும் குறிப்பிட்டனர். இதை கேட்கும் போது சந்தோஷமாக இருந்தது.

நான் அவருடன் அதிகமாக உரையாடியதில்லை. அவர் பார்ப்பதற்கு கரடு முரடானவர் போல் இருந்தாலும்.. அவருடைய பேச்சு முரணாக இருந்தாலும்.. ஆனால் அவருடைய கேரக்டர் இவ்வளவு சிறப்பாக இருக்கிறதைப் பார்க்கும் போது எனக்கு உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறது.

இந்தப் படத்தில் அவர் முதன்முதலாக கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். அதனால் இந்த நிகழ்ச்சியை அவரே முன்நின்று ஒருங்கிணைத்து வருகிறார்.‌

நான் இங்கு வந்த பிறகு தான் இந்தப் படத்தில் நாஞ்சில் சம்பத் – பழ கருப்பையா போன்றவர்கள் நடித்திருக்கிறார்கள் என்பதை அறிந்து கொண்டேன். இவர்களுடைய தமிழை கேட்க மிகவும் விரும்புவேன். எல்லோராலும் இலக்கண சுத்தமாக தமிழில் பேச முடியாது. அதில் அவர்கள் சிறப்பாக பேசக்கூடியவர்கள்.

இந்தப் படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர்- இசையமைப்பாளர் -நடிகர்கள்- நடிகைகள்- என அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.

இங்கு சென்சார் பிரச்சனையை பற்றி பேசினார்கள். என்னுடைய படங்கள் என்றால்.. சென்சாரில் நான்கு பெண்கள் ஒரு ஆண் இருப்பார்கள். ‘மௌன கீதங்கள்’ படத்தில் ஒரு காட்சி இடம் பிடித்திருக்கும். இந்த காட்சியை சென்சார் குழுவில் இருந்த பெண்கள் பிடித்துக் கொண்டனர். இது எப்படி? இது ரெட்டை அர்த்தத்தை குறிப்பிடுகிறது. எப்படி அனுமதிப்பது? என கேள்வி எழுப்பினர். இதில் என்ன இரட்டை அர்த்தம். எனக்கு எதுவும் புரியவில்லை என்று சொன்னேன். அப்போது அவர்களிடம் கணவன் – மனைவி இடையே தானே பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று விளக்கம் அளித்தேன்.

இதனால் சில காட்சிகள் இயல்பாக இருந்தால் அதனை போராடி இடம்பெறச் செய்யலாம். இந்த படத்தில் இயக்குநர் ராம்தேவ் அரசியலை சொல்லி இருக்கிறார். என்னுடைய அரசியல் எல்லாம் குடும்பங்களில் தான் இருக்கும். அதற்காக நான் என்னுடைய படங்களை இயக்கும்போது சென்சார் பற்றி கவலைப்பட்டதில்லை.

இந்த படத்தின் பணிகள் நிறுத்தப்பட்ட போது இதனை தொடர்ந்து தயாரிக்க வேண்டும் என்று நினைத்து உதவிய தயாரிப்பாளர் கவிதாலயா சரவணனை பாராட்டுகிறேன்.

இந்த படம் இந்த நேரத்தில் அரசியல் நையாண்டியுடன் வந்தால் எதிர்பார்ப்பு கூடுதலாக தான் இருக்கும். சிரித்துக் கொண்டே காமெடியாக சொல்லும்போது ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்கள்” என்றார்.

'Makkal Thalaiva' MovieAudio Launch Event Stills and News of Ravi Maria and Radha Ravi's 'Makkal Thalaiva' MovieRadha RaviRavi Maria
Comments (0)
Add Comment