“பேரன்பும் பெருங்கோபமும்” திரைப்படம் விவாதத்தை ஏற்படுத்தும் படம்! புதிய கோணத்தில் ஆணவக் கொலையை அணுகுகிறது

பேரன்பும் பெருங்கோபமும் திரைப்படம் விவாதத்தை ஏற்படுத்தும் படம்!
புதிய கோணத்தில் ஆணவக் கொலையை அணுகுகிறது ;

நான் நீண்ட காலமாக பேசி வருகின்ற அரசியலை இரண்டு மணி நேரத்தில் சொல்லுகிற ஒரு திரைப்படமாக இதை சிவப்பிரகாஷ் இயக்கி இருக்கிறார்!

தொல். திருமாவளவன் பாராட்டு

E 5 என்டர்டெயின்மென்ட் சார்பில், தயாரிப்பாளர் காமாட்சி ஜெயகிருஷ்ணன் தயாரிப்பில், இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகி, இயக்குநர் தங்கர் பச்சான் வழங்கும் படம் ‘பேரன்பும் பெருங்கோபமும்’. பாலுமகேந்திராவின் பட்டறையில் தயாரானவரும் இயக்குநர் கரு.பழனியப்பனிடம் உதவியாளராக பணியாற்றியவருமான சிவப்பிரகாஷ் இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆகிறார். இயக்குநர் தங்கர் பச்சானின் மகன் விஜித் இந்த படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக ஷாலி நிவேகாஸ் நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் மைம் கோபி, அருள்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்..

வரும் ஜூன்-5 ஆம் தேதி இந்தப்படம் வெளியாகிறது.. இந்தநிலையில் இந்தப்படத்தின் சிறப்பு திரையிடல் காட்சியை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் இன்று பார்த்தார்..

படம் பார்த்துவிட்டு தொல். திருமாவளவன் பேசும்போது, “பேரன்பும் பெருங்கோபமும் என்கிற இந்த திரைப்படம் புதிய கோணத்தில் ஆணவக் கொலையை அணுகுகிறது. இந்த படம் சாதிய முரண்களை விரிவாக, நுட்பமாக, மிக ஆழமாக பேசுகிறது. சாதி மாறி திருமணம் செய்யக்கூடாது என்பது காலம் காலமாக நம் சமூகத்தில் இருந்து வருகின்ற ஒன்று. இதனால் ஆணவக் கொலைகள் அவ்வப்போது நடந்திருக்கின்றன. அவ்வாறு சாதி மாறி திருமணம் செய்து கொள்கின்ற ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி அவர்களை அந்தந்த சமூகம் ஏற்றுக் கொள்வதில்லை. உறவினர் ஏற்றுக் கொள்வதில்லை. பெற்றோரும் ஏற்றுக்கொள்வதில்லை.. அதையும் தாண்டி அவர்களை படுகொலை செய்யும் கலாச்சாரமும் நம்மிடையே வலுவாக இருக்கிறது.

அவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர்களே இங்கே தெய்வங்களாக வணங்கப்படுகின்ற, வழிபாடு செய்யப்படுகிற ஒரு கலாச்சாரமும் நம்மிடையே கலந்து இருக்கிறது. மதுரை வீரன் சாமி கூட, சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டு அதன் அடிப்படையில் படுகொலை செய்யப்பட்ட ஒரு வரலாறாக தான் நான் காண்கிறோம். அப்படி தென் மாவட்டங்களில் முத்தாலம்மன் வழிபாடு இன்றைக்கும் இருக்கிறது. இந்த முத்தாலம்மன் என்கிற தெய்வம் சாதி அடிப்படையில் படுகொலை செய்யப்பட்ட ஒரு பெண்ணின் வரலாறாக தான் இன்றைக்கும் பேசப்பட்டு வருகிறது. அந்த கருப்பொருளை மையமாக வைத்து இயக்குநர் சிவப்பிரகாஷ் இயக்கி இருக்கும் பேரன்பும் பெருங்கோபமும் என்கிற இந்த திரைப்படம் புதிய கோணத்தில் ஆணவக் கொலையை அணுகுகிறது. ஆழமான கருத்துக்களை விவாதமாக்கி இருக்கிறார். சாதி ஒழிப்பை முன்னிறுத்துகிறார். இயக்குநர் சிவப்பிரகாஷ் கையாண்டிருக்கும் யுக்தி பலரையும் வியப்பில் ஆழ்த்தக்கூடியதாக இருக்கிறது. ஆழமாக சிந்திக்க வைக்க கூடியதாக இருக்கிறது. சாதி பிறப்பால் வருவதில்லை வளர்ப்பால் வருகிறது என்பதை ஆழமாக பதிவு செய்திருக்கிறார்.

40 ஆண்டுகளுக்கு முன்னர் ‘எடுப்பார் கைப்பிள்ளை’ என்கிற திரைப்படம் வெளிவந்தது. உயர்ந்த கல்வி பெற்ற குடும்பத்தில் பிறக்கும் பிள்ளை மிக சாதாரண குடும்பத்தில் வளரும். சாதாரண குடும்பத்தில் பிறந்த பிள்ளை செல்வந்தர் குடும்பத்திலே வளரும். சாதாரண குடும்பத்திலே பிறந்த பிள்ளைக்கு அந்த சாதி புத்தி இருக்கும் அல்லது உயர்ந்த குடும்பத்தில் பிறந்த பிள்ளைக்கு உயர்ந்த புத்தி இருக்கும் என அப்படி ஒரு வரையறையே இல்லை, அது வளர்ப்பின் அடிப்படையில் தான் அமையும் என்பதை அப்போதே அந்த படம் சொல்லி இருக்கிறது.

அதை இன்றைக்கு வேறு ஒரு கோணத்தில் எந்த சாதியிலே பிறந்தாலும், அந்த குழந்தை வளர்ப்பின் அடிப்படையில் தான் தனது பண்பு நலன்களை பரிணாமம் செய்து கொள்கிறது, அந்த அடிப்படையில் தான் வளர்ந்து இயங்குகிறது என்பதை இந்த திரைப்படம் மிக அழகாக விவரிக்கிறது, பொதுமக்களிடையே பல கேள்விகளை எழுப்பக் கூடிய வகையில் இந்த திரைப்படம் பேசுகிறது. சாதி மாறி பிள்ளைகளை வளர்த்தால் கூட அந்த வளர்ப்பின் அடிப்படையில் தான் அவர்கள் குணம் இருக்குமே தவிர குருதி அடிப்படையில், ஜீன் அடிப்படையில் சாதிப் பண்பு என்பது தொடர்வதற்கு வாய்ப்பு இல்லை. அறிவு சம்பந்தமான, ஆற்றல் சம்பந்தமான வேறு பண்பு நலன்கள் குருதி வழியே தலைமுறைக்கு தலைமுறை புலம்பெயர்வதுண்டு. பரிணாமத்தில் அது இடம் பெயர்வதுண்டு. ஆனால் சாதி என்பது இடையிலே நாம் ஒரு சமூக கட்டமைப்பில் மேல் கட்டுமானமாக வளர்த்திருப்பதால், ஒரு கலாச்சாரமாக வளர்த்திருப்பதால் அது குருதி வழியே போகாது, இந்த சாதியை நாம் கட்டிக் காப்பாற்ற கூடாது, அது அழித்தொழிக்க வேண்டிய ஒன்று, அது சமூக மேம்பாட்டுக்கு மிகப்பெரும் முட்டுக்கட்டையாக இருக்கிறது, ஆகவே சாதிய முரண்களை நாம் விரிவாக விவாதிப்போம், அதை களைந்து எறிய அல்லது அழித்தொழிக்க சொல்லுகிற ஒரு திரைப்படமாகத்தான் பேரன்பும் பெருங்கோபமும் என்கிற திரைப்படம் திரைக்கு வருகிறது.

விஜித் பச்சான் முதல் படத்தில் நடிக்கிறார் என்கிற எண்ணமே ஏற்படாத அளவுக்கு மிக இயல்பாக சிறப்பாக நடித்து இருக்கிறார். உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த திரைப்படம் வெளி வருகின்ற அதே ஜூன் 5ஆம் தேதியில் தம்பி விஜித்தின் திரைப்படம் வருகிறது. அந்தப் படத்தை நான் பார்க்கவில்லை. இந்த படத்தை நான் பார்த்து விட்டேன். இந்தப் படம் என்னை வெகுவாக ஈர்த்து இருக்கிறது. நான் நீண்ட காலமாக பேசி வருகின்ற அரசியலை இரண்டு மணி நேரத்தில் சொல்லுகிற ஒரு திரைப்படமாக இதை சிவப்பிரகாஷ் இயக்கி இருக்கிறார். அதைவிட முக்கியமாக அண்ணன் தங்கர் பச்சான் அவர்களின் மைந்தர் விஜித் பச்சான் இந்த படத்தில் கதையின் நாயகனாக நடித்திருப்பது சாலப் பொருத்தமானது. அவர் எழுப்புகின்ற கேள்விகள் ஒவ்வொன்றும் சாதியவாதிகளுக்கு மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். சிந்திக்க தூண்டும். சாதி வேண்டாம் என எண்ண தோன்றும். அத்தகைய காட்சிகள் இந்த படத்தில் அமைக்கப்பட்டு இருக்கின்றன. வசனங்கள் ஒவ்வொன்றும் நெஞ்சில் ஆழமாக பதியக் கூடியவையாக இருக்கின்றன. மிகப்பெரிய விவாதத்தை எழுப்பக்கூடிய திரைப்படமாக இந்த படம் அமையும் என்று நான் பெரிதும் நம்புகிறேன்.

இயக்குநர் சிவப்பிரகாஷ், தம்பி விஜித் ஆகியோரை மனதார பாராட்டுகிறேன். நாயகி ஷாலியும் தனது பாத்திரத்தை மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார். ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் பாராட்டும் அதே வேளையில் இந்த திரைப்படத்தின் உயிரோட்டமாக இருப்பது இசைஞானி இளையராஜா அவர்களின் இசை. இந்த படத்திற்கு மிகப்பெரிய அளவில் உயிர்ப்பை தருகிறது. உயிரோட்டத்தை தருகிறது. அந்த இசையே இந்த படத்தை வெகு மக்களுக்கு கொண்டு போய் சேர்க்கும் என்று நான் பெரிதும் நம்புகிறேன். தமிழ் சமூகத்தில் ஜனநாயக சக்திகளாக இருக்கும் அனைவரும், சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை என்று நம்புகிற புரட்சிகரமான முற்போக்கான சிந்தனை உள்ள ஒவ்வொருவரும் வரவேற்று ஆதரிக்க வேண்டிய திரைப்படம் இது. கட்டாயம் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய திரைப்படம். ஒரு முறையாவது திரையரங்குக்கு சென்று இந்த படத்தை பார்க்க வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன்.

இயக்குநர் சிவப்பிரகாஷ் பாலு மகேந்திராவின் மாணவர் என்பதால் அவருடைய சாயல்கள் ஆங்காங்கே இந்த படத்தில் வெளிப்படுகின்றன. நல்ல அருமையான காட்சிகளை பதிவு செய்து இருக்கிறார். விறுவிறுப்பான ஒரு கதை என்றாலும் கூட ரம்யமான காட்சிகளையும் இதில் இணைத்து இந்த திரைப்படத்தை எழிலூட்டி இருக்கிறார். கதைக்கரு மிகவும் வலுவானது. ஆழமானது. அனைவரும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டியது. ஆணவக் கொலை தொடர்பான பல படைப்புகளை பலரும் படைத்திருக்கிறார்கள். ஆனால் இதிலே ஒரு புதிய யுத்தியை இயக்குனர் கையாண்டு இருக்கிறார். நிச்சயமாக இது விவாதத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன். கதை சொல்லியாக பாவா செல்லத்துரை மற்றும் இன்னும் சில முக்கிய பாத்திரங்களும் இந்த படத்தில் இருப்பது இந்த படத்திற்கு சிறப்பு சேர்க்கிறது. இந்த படம் வெற்றி பெற வாழ்த்துக்கள். தம்பி விஜித் பச்சான்!

இதுபோன்று இன்னும் பல படைப்புகளை தமிழ் சமூகத்திற்கு அவர் வழங்குவார் என்று நான் பெரிதும் நம்புகிறேன். தங்கர் பச்சானின் படைப்பு தான் விஜித் பச்சான். அவரைப் போல ஒரு புரட்சிகரமான பார்வை அவரிடத்திலே இருப்பதை பார்க்க முடிகிறது. இது போன்ற படத்தில் நடிக்க ஒப்புக் கொள்வதும், அந்த வசனங்களை பேசுவதும், கருத்தியல் ரீதியாக உடன்பட்டால் மட்டும்தான் முடியும். இயக்குநர் சிவப்பிரகாஷ் என்ன சிந்தித்திருக்கிறாரோ அதை அப்படியே அருமையாக வெளிப்படுத்தி இருக்கிறார். ஜனநாயக சக்திகள் அனைத்தும் இதனை வரவேற்க வேண்டும். திரையரங்குகளுக்கு சென்று இந்த படத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

@Shali_Nivekas#PeranbumPerungobamum!Actor VijithDirector Thangar BachanE 5 EntertaimentIlayarajaProducer Kamochi JayakrishnanThol Thirumavalavan
Comments (0)
Add Comment