கொரோனா மட்டுமே கொல்கிறதா ? 2-ம்பாகம் – A true story by Vasan. Suri

406

தீவிர சிகிச்சை பிரிவு உள்ளே (நான்காம் நாள்)

முகுந்தன் இப்போது மிக  ஓய்வாக உணர்ந்தார். தன் சுவாசம் கூட தன வசம் இல்லாமல் ,
இயந்திரவசம் இருப்பதால் அந்த வேலை கூட இல்லாமல் மிக ஓய்வில் இருப்பதாக நினைத்தார். நாளை பற்றிய கவலை இல்லாமல், தன மகனின் திருமணத்தை பற்றிய எண்ணங்களோ ஏதும் அவருக்கு பெரிதாக தோன்ற வில்லை.

தன் குடும்பமே தன் உலகம் என்றிருந்தவர் இனி அந்த உலகத்துக்கு போக முடியாது என்று
உறுதியாக நம்ப தொடங்கினார். அவரின் தந்தை எப்போதும் சொல்லும் ஒரு விஷயத்தை நினைவுகூர்ந்தார். ஒரு மனிதன் வாழ்க்கையில் 3 இடங்களுக்கு போகவே கூடாது, காவல் நிலையம், நீதிமன்றம், மருத்துவமனை. தன்  தந்தை நீதிமன்றம் ஏறி அணைத்து சொத்துக்களையும் இழந்தார். தான்  இப்போது மருத்துவமனையில் இருக்கிறோம். இவைதான் நம் கடைசி நாட்களோ?

தீவிர சிகிச்சை பிரிவு வெளியே (நான்காம் நாள்)

மாமாவும், பிள்ளைகளும் டாக்டர்க்காக காத்திருந்தனர்.முகுந்தனின் வருங்கால சம்பந்தியும்
வந்திருந்தார். அன்று டூட்டியில் இருந்த டாக்டர் ஏதும் நல்ல செய்தியாக சொல்வதாக
தெரியவில்லை யாரிடமும். அனைவரிடமும், நீங்கள் இங்கு இருப்பதில் பயன் இல்லை , வீட்டுக்கு செல்லுங்கள்.  ஏதாவது செய்தி என்றால் நாங்கள் போன் பண்ணுவோம், போன் வரவில்லை என்றால்  அனைத்தும் நலம் என்று புரிந்துகொள்ளுங்கள். போன் வரக்கூடாது என்று பிராத்தித்து கொள்ளுங்கள் என்று கூறினார் .

முகுந்தனின் பிள்ளைகளிடம் வந்து, அவர் சுயநினைவில் இல்லை, உடல்நிலை மோசமாகி
வருகிறது, நீங்கள் ஒரு முறை போய் பார்க்கலாம் என்று சொன்னார். மாமா,  பிள்ளைகளிடம்  விரலசைவுகளையும் , உயிர் அசைவுகளையும் நன்றாக கவனிக்க சொல்லி அனுப்பினார். முகுந்தனிடம் உரக்க பேசி அவரை சுயநினைவுக்கு வரவைக்க முயற்சி செய்ய
சொன்னார்.

தீவிர சிகிச்சை பிரிவு உள்ளே பாதுகாப்பு உடை அணிந்து உள்ளே சென்று உரக்க பேசினர் பிள்ளைகள் . அப்பா சீக்கிரம் வீட்டுக்கு வாங்க, கல்யாண வேலை நிறைய இருக்கிறது, வீட்ல எல்லாரும் உங்களுக்காக காத்திருக்கிறோம் கண்திறந்து பாருங்க அப்பா.  இப்படி  பிள்ளைகள் எவ்ளோவோ பேசியது காதில் கேட்டாலும், முகுந்தனால் எந்த பதிலும் சொல்ல இயலவில்லை. கண்ணின் ஓரம் கண்ணிர்  துளிகளை மட்டுமே பதிலாக தந்தார்.
பிள்ளைகள் கண்ணீருடன் வெளியே வந்து மாமாவிடம் விவரம் சொன்னார்கள்.

தீவிர சிகிச்சை பிரிவு வெளியே (ஐந்தாம் நாள்)

வழக்கம் போல் டாக்டர் வருகைக்காக காத்திருந்தனர் அனைவரும். தலைமை மருத்துவர் வந்தார். அவர் ஒருவர் தான் கொஞ்சம் மனித சுபாவத்தோடு, ஆறுதலாக பேசுபவர். முகுந்தனின் உடல்நிலை, பிராணவாயு குறைவினால் மூளை செயலிழந்து வருவதாகவும் , நுரையீரல் கல்லு போல் இறுகி செயல் இல்லாமல் இருப்பதாகவும் சொன்னார். கடவுள் மட்டுமே உதவ முடியும் . நல்ல பிராத்தனை செய்யுங்கள் என் கூறி உள்ளே  சென்று பார்க்க அனுமதித்தார். இன்று பிள்ளைகள் அவரின் ஆசை பேத்தியின் பெயர் கூறி அவரின் நினைவை மீட்க நினைத்து வந்திருந்தனர்.

தீவிர சிகிச்சை பிரிவு உள்ளே  முகுந்தனின் மகன் என்னென்னமோ பேசி பார்த்தான், ஒரு மாற்றமும் இல்லை. மகள் பேத்தியின் பெயர் சொல்லி பேச முகுந்தன் உடல் சிறிது அசைந்து மீண்டும் மயக்கத்துக்கு சென்றார்.

தீவிர சிகிச்சை பிரிவு உள்ளே (ஆறாம் நாள்)
முகுந்தன் ஆழ்ந்த மயக்கத்தில் இருந்தார். அவருக்கு வெளி உலகை பற்றி எந்த கவலையும்,
நினைவும் இல்லை. 65 வருடம்  ஓடி ஓடி பார்த்து  கொண்ட குடும்பத்தை பற்றிய நினைவு கூட இல்லாமல் ஆழ்ந்த நிம்மதி யான உறக்கத்திற்கு சென்று கொண்டிருந்தார்.

தீவிர சிகிச்சை பிரிவு வெளியே (ஆறாம் நாள்)

டாக்டர் , முகுந்தனின் சிறுநீரகங்கள் செயலிழந்து விட்டன, இருதயம் மட்டுமே துடிக்கின்றன, அதுவும் எவ்வளவு நேரம் என சொல்ல இயலாது , நாங்கள்  எங்களால் முடிந்த மருந்துகளை கொடுத்து வைத்தியம்  பார்க்கிறோம் என்றார் . செயலிழந்த நுரையீரல் , மூளை, சிறுநீரகம் இவைகளுக்கு என்ன மருந்து கொடுத்து என்ன  செய்யப்போகிறார்கள்? எதற்காக? காப்பீடு தொகைக்காகவா ? குடும்பத்தினரின் சேமிப்பை கரைப்பதற்காகவா? இருக்கும் மருந்துகளை விற்பதற்காகவா? கண்ணீருடன் பிள்ளைகள் மனபாரத்துடன், மற்ற குடும்பத்தினர், நண்பர்களின் போன் கால்களை , அவர்களின் ஆறுதல்களை , அறிவுரைகளை கேட்டு கொண்டு வீடு திரும்பும்போது , அவர்களின் பாட்டி ,முகுந்தனின் தாய் பேச்சு மூச்சில்லாமல் இருப்பதாக போன் வந்தது. பேரிடியாய்  இருந்தது அந்த செய்தி. காலையில் கிளம்பும் போதே பாட்டியின் உடல் நிலை சரி இல்லாமல் இருந்தது. இப்போது பேச்சு மூச்சில்லாமல் இருக்கிறார்.

வீடு வந்து பார்த்து, அவர் உடல் சில்லிட்டுஇருப்பதை பார்த்து மாமா அவர் இறந்ததை உறுதி
படுத்தினார் . அடுத்த பெரும் சிக்கல், பாட்டியின் இறப்பை உறுதி படுத்தி சான்றிதழ் அளிக்க எந்த டாக்டரும் வீட்டிற்கு வர தயாரில்லை. பாட்டியையும் மருத்துவமனைக்கு எடுத்து போக முடியாது. எவ்வளவு வேதனை.ஒரு மணி நேரத்துக்கு பிறகு பல மருத்துவமனை ஏறி இறங்கி , ஒரு மருத்துவமனை பெரிய மனது வைத்து ஒரு நர்ஸை அனுப்பி வைத்தனர்.அவரும் வந்து இறப்பை உறுதி செய்தார்.

இதற்கிடையில் நகராட்சி ஆட்கள் வந்து அவர்கள் வீட்டை கொரோனா பாதிக்கப்பட்ட வீடாக
அறிவித்து நோட்டீஸ் ஒட்டி சென்றனர். அவர்கள்  தீண்டக்கூடாத மனிதர்கள் ஆனார்கள் சில
நிமிடங்களில். உலகம் முழுக்க இது நடந்தாலும் நமக்கு நடக்கும் பொது தான் நம் உறவினர்,
நண்பர்கள் பற்றி அறிய முடிகிறது.

பாட்டியின் இறுதி சடங்கிற்கான வேலைகள், ஒரு நல்ல மனம் படைத்த மனிதரின் உதவியால் நல்லபடியாக நடந்தேறின.மகனை சில நாட்களாக காணாத தாய் உள்ளம் , அவரின் நிலை அறிந்து தான் முன்னதாக போய் மகனுக்காக காத்திருக்க முடிவு செய்து சென்று விட்டார்.

தீவிர சிகிச்சை பிரிவு வெளியே

முகுந்தனின் பிள்ளைகள் பாட்டியை வழியனுப்பி வைத்துவிட்டு அப்பாக்காக தீவிர சிகிச்சை
பிரிவுக்கு  வெளியே காத்திருந்தனர். அனைத்து சடங்குகளும்  முடித்து மாமாவும் முகுந்தனின் பிள்ளைகளோடு வந்து சேர்ந்து கொண்டார். டாக்டர் வந்து எந்த முன்னேற்றமும் இல்லை, என கூறினார்.

அப்போது மருத்துவமனை  அலுவலத்திலிருந்து போன் வந்தது, ரூபாய் ஒன்றரை லட்சம் செலுத்த சொல்லி. முன்பணமாக ரூபாய் ஒன்றரை லட்சம், காப்பீடு தொகை ரூபாய்  6 லட்சம்,  ஏற்கனவே கொடுத்ததும், இப்போது மேலும் ஒன்றரை லட்சம் கேட்கிறார்கள்.
மாமா, இனி எதற்கும் பணம் கட்டாதே , கட்டிய பணத்திருக்கான  ரசீது எதுமே இன்னும்
தரவில்லை என்று சொன்னார்.

தீவிர சிகிச்சை பிரிவு உள்ளே (ஏழாம்  நாள் )

முகுந்தன் ஒரு பரவச நிலையில் இருந்தார். அவர் நினைவில் ஒன்றுமே இல்லை. அனைத்தும் மறந்து துறந்து பரவசமாக இருந்தார். கவலை இல்லாத இந்த 4 நாட்கள் அவர் வாழ்வின் சிறந்த நாட்களோ?

தீவிர சிகிச்சை பிரிவு வெளியே (ஏழாம்  நாள் )

ரசீது கேட்ட பின்னர் நிர்வாகம் 4.8 லட்சத்துக்கு தோராயமாக ஒரு ரசீது கொடுத்து, இன்சூரன்ஸில்  50% மட்டுமே கிடைக்கும் எனவும், பாக்கி தொகை அவர்களே செலுத்த வேண்டும் என சொன்னார்கள். கொடுத்த  ரசீதும் முழு விவரங்கள் இல்லாமல் இருந்தது. டாக்டர் பீஸ் சேர்க்கவில்லை, டிஸ்சார்ஜ் ஆகும் சமயத்தில் தான்  முழுதாக எவ்வளவு ஆனது என்று தெரியும் என்றும் சொன்னார்கள். அந்த அறியாத பில் தொகை எண்ணி பயமும், பதட்டமும் சேர்ந்து கொண்டது அனைவர்க்கும். மாமா அவரால் முடிந்த வரை , அவரின் நண்பர்களின் துணையோடு பில் தொகை சரியாக வருமாறு பார்த்து கொள்வதாக உறுதி கொடுத்தார்.

இதற்கிடையில் குடும்ப ஜோசியர் முகுந்தன் நன்கு குணமாகி வீடு வருவார், அம்மாக்கு
செய்யவேண்டிய கடமைகள் எல்லாம் செய்வார் என்று சொன்னதை கேட்டு மாமா
பிள்ளைகளுக்கு  தைரியம் கொடுத்தார்.

6 நாட்களுக்கு பிறகு கேட்ட நம்பிக்கை தரும் வார்த்தையால் பிள்ளைகளும் வீட்டில்
இருந்தவர்களும் நம்பிக்கையுடன், நிம்மதியாக உணவருந்தி உறங்க சென்றனர்.
திடீரென மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து போன் வர எல்லாரும்  என்ன செய்தியென பதட்டமானார்கள். நர்ஸ் , முகுந்தன் அவர்களின் இருதயம் செயலிழக்க தொடங்குவதாவும், அவசர சிகிச்சை செய்வதாகவும் சொன்னார். மருத்துவமனை சென்ற சில நிமிடங்களில் முகுந்தன்  தங்களை பிரிந்து சென்று விட்டார் என்ற செய்தி இடியென இறங்கியது குடும்பத்தினருக்கு. சிறிது நேரம் முன் அப்பா நல்லபடியாக குணமாகி வருவார் என்று நம்பிக்கை பேச்சு வெறும் பேச்சாக போனது.

டூட்டியில் இருந்த டாக்டர் கண்ணாடி வழியாக முகுந்தனை ஒரு முறை பார்த்து கொள்ள
அனுமதித்தார் . பிறகு, நகராட்சிக்கு சென்று, ஆய்வாளரை சந்தித்து இறுதி சடங்கிற்கான
ஆயத்தங்களை செய்ய சொன்னார். அதற்கு முன், அலுவலகத்திற்கு சென்று  பில் செட்டில்
செய்யச்சொன்னார். பின்பே முகுந்தனின் உடல் ஒப்படைக்கப்படும் என்றார்.

தீவிர சிகிச்சை பிரிவு உள்ளே 4 நாட்களாக தான்  இருந்த மயக்கநிலை, மறந்தநிலை மாரி, தன நெஞ்சு வலிப்பதை உணர்ந்து துடித்தார் முகுந்தன்.அவர் உடலில் இணைக்கபட்டிருந்த வயர்கள், குழாய்கள் அனைத்தும் நீக்கப்பட்டு,அவரை கொரோனா பாதுகாப்பு சவ பையில் வைப்பதை உணர்ந்தார்.  மயக்கம் மறந்து , சுயநினைவு கொண்டவராக தான் இறக்கவில்லை, என் பிள்ளைகளை கூப்பிடுங்கள், நான் வீட்டிற்கு செல்ல வேண்டும், அம்மாவை பார்க்க வேண்டும் என்று உரக்க கத்தினார். ஆனால் யார்க்கும் அவர் பேசியது கேட்கவில்லை. அவர் உடல் சவக்கிடங்குக்கு அனுப்பப்பட்டது.

தீவிர சிகிச்சை பிரிவு வெளியே

மாமா பிள்ளைகளுடன் பணம் கட்ட சென்ற நேரம் அதிகாலை .அங்கு இருந்தவர் இவர்களின்,
இழப்பை பற்றியோ, துக்கத்தை பற்றியோ சிறிதும் கவலை இல்லாது காலை 9 மணிக்கே பில் செட்டில் செய்யமுடியும், இன்சூரன்சில் நீங்கள் தான்  பேசி பில் கட்டவேண்டும். இது எல்லாம் முடிய  3-4 மணி நேரம் ஆகும் என்று சொல்லிவிட்டு , அவரின் வேலை பார்த்துக்கொண்டிருந்தார் .

தீவிர சிகிச்சை பிரிவு வெளியே  (எட்டாம் நாள் )

முகுந்தனின் பிள்ளைகள் இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகளை எல்லாம் நகராட்சி ஆய்வாளரின் உதவியோடு செய்து விட்டு, பில் செட்டில் செய்ய வந்தபோது , ஒரு ஆறுதலான செய்தி கிடைத்தது. அரசு, முறைகேடாக அதிகமாக வசூல் செய்த சில மருத்துவமனைகளை மூட உத்தரவிட்டதால் , இவர்களின் பில் முறையாக செட்டில் செய்ய வழிவகுத்தது.

கோவிட் இறப்பிற்கு என ஒதுக்கப்பட்ட தகன கூடத்துக்கு முகுந்தனின்  உடல் ஆம்புலன்ஸில் எடுத்து செல்ல பட்டது. குடும்பத்தினர் தூரத்தில் இருந்து கடைசி முறை அவரின் முகத்தை பார்த்து கொண்டனர். தகன கூடத்தில் அவரின் உடல் மேல் கற்பூரம் வைத்து எரியூட்ட சொன்னார்கள். பின்னர் மின்சார தகன குழிக்குள் அனுப்பிவிடுவர் உடலை.

முகுந்தன் அவரின் உடல் சூடு அதிகரிப்பதை  உணர்ந்தார் . வேண்டாம் என்னை எரிக்காதீர்கள், நான்  வீட்டிற்கு போகவேண்டும் என்று அலறத்தொடங்கினார். எங்கோ தூரத்தில் அவருக்கு அவரின் அம்மா குரல் கேட்டது.

முகுந்தன் அம்மா அம்மா என்று சத்தம்  போட , அவரின் மனைவி அவர் முகத்தில் தண்ணீர்
தெளிக்க,
மகனும் மகளும் அவரை உலுக்கி எழுப்பி,  அப்பா என்ன ஆச்சு, ஏன் இப்டி சத்தம்  போடறீங்க,
மணி 8 ஆகுது. கண்ட கண்ட  திகில் படம்லா  பாத்துட்டு இப்டி தூக்கத்துல அலறி புலம்புறீங்க
அப்பா என்றனர்.
முகுந்தன் கண் விழித்து பார்த்து அனைத்தும் கனவு என்று உணர்ந்து நிம்மதியானர் .
தன்  கனவை குடும்பத்தினருடன், பகிர்ந்து கொண்டு, அரசு சொல்லும் பாதுகாப்பு முறைகளை கடைபிடிக்க வலியுறுத்தினார்

1.மாஸ்க் அணியுங்கள்
2. உரிய  சமூகஇடைவெளியை கடைபிடியுங்கள்
3. நீராவி தொடர்ந்து எடுத்துக்கொள்ளுங்கள்
4.சூடான சத்தான உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள்
5. உங்கள் சுவாச திறனை அவ்வப்போது சரிபார்த்து கொள்ளுங்கள் .
6.தடுப்பூசி வரும் வரை ஜாக்கிரதையாக  இருங்கள்.
“லோகா  சமஸ்தா சுகினோ பவந்து ”.
ஜெய் பாரத்! ஜெய் ஹிந்த்!

– வாசன் சூரி

– ( உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எழுதப்பட்டது.)

Leave A Reply

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com